Monday, June 14, 2010

சொல்லத் தெரியாதவை...


1 .
நல்லது.
ஒரே முயற்சியில்
சுடரை
மிகச் சரியாக
ஊதியனைத்து விட்டீர்கள்.
ஆனால்
கருகிய திரியின் முனையிலிருந்து
வலியோடு மேலெழும்பும் புகையின்
ஏன் ? என்ற கேள்வியை
என்ன செய்ய போகிறீர்கள்.

சூரியன் வந்த பிறகு
இச் சிறு சுடரின் தயவெதற்கென
ஒற்றை வரியில் கடந்து விடலாம்தான்

என்றாலும்,
அவ்வரிகளை கொஞ்சம்
அழுந்தச் சொல்லுகையில்
உங்கள் இரவுகளெங்கிலும்
மெல்லிய துரோகம் கசிகிறது.

2 .
கூட்டினில் பசியோடிருக்கும்
குஞ்சுகளுக்காக
இரை தேடும் இப் பறவையின்
கால்களில் இருக்கும் நடுக்கத்தையோ,
கண்களில் தெரியும் தவிப்பையோ
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால்
அதன் தேடல் மட்டும்
நலிந்த தகப்பனொருவனின்
வாழ்க்கையை ஒத்திருந்தது

3 .
எனக்கு சொந்தமான
வாழ்க்கையின் பெரும் பகுதியை
தின்று விடுகிறது -
என் வயிறு

.

33 comments:

  1. மூன்றும் அருமை கமல்ஜி...2-வது நெஞ்சை தொடுகிறது...அருமை வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. மூன்று க‌விதைக‌ளும் ந‌ல்லா இருக்கு... ப‌ட‌மும் சூப்ப‌ர்..

    ReplyDelete
  3. மெழுகுவர்த்திக்கு புதுமை விளக்கவுரை

    ரசித்(தேன்)

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  4. //////கூட்டினில் பசியோடிருக்கும்
    குஞ்சுகளுக்காக
    இறை தேடும் இப் பறவையின்
    கால்களில் இருக்கும் நடுக்கத்தையோ,
    கண்களில் தெரியும் தவிப்பையோ
    எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
    ஆனால்
    அதன் தேடல் மட்டும்
    நலிந்த தகப்பனொருவனின்
    வாழ்க்கையை ஒத்திருந்தது
    //////////

    அந்தரத்தில் கயிறு ஒன்றின் மீது நடக்கும் வீரன் ஒருவனின் உணர்வுகளை ஒத்த உணர்வுகள் இந்த கவிதையில் .
    மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே .

    ReplyDelete
  5. வலியை, வேதனையை, ஆற்றாமையை இன்னும் பலவற்றை சொல்லி, கவிதை நெஞ்சை தொடுகிறது.

    ReplyDelete
  6. மூன்றாவது கவிதை அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. எப்பா சாமி ஆள விடு.. இப்படிப் போட்டுத் தாக்குறீங்க..

    நண்பா சும்மா சொல்றதுக்காக சொல்லல, ஒரு குற்ற உணர்ச்சி கொழுந்துவிட்டு எரிகிறது..

    ஆமா ஒரே கவிதையை எதுக்கு 1,2,3னு போட்டுப் பிரிச்சு வெச்சுருக்கீங்க..!!

    ReplyDelete
  8. கமலேஸ்...படமே கவிதை சொல்கிறது.
    ஆற்றாமை வலி சொல்லும் கவிதைகள்.

    ReplyDelete
  9. Moondrum Arumai nanba...

    kurippaga irandam kavithai kasinthu poga vaikkirathu...

    ReplyDelete
  10. மூன்றுகவிதையும் தூள்!
    இரண்டாவது கவிதை மிக வலிமை.
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. //கருகிய திரியின் முனையிலிருந்து
    வலியோடு மேலெழும்பும் புகையின்
    ஏன் ? என்ற கேள்வியை
    என்ன செய்ய போகிறீர்கள்.//

    கமலேஷ் சிந்தனை அருமை இந்த வரிகள் நல்லா இருக்குப்பா...

    ReplyDelete
  12. கொன்னுட்டீங்க!!

    அனைத்தும் அருமை. :)

    ReplyDelete
  13. உருகி ஒளிதந்த மெழுகின் கண்ணீர்தான் புகை வடிவானதோ

    ReplyDelete
  14. ஆதவன் வந்தபின் அழுது வடியும் மெழுகுவர்த்தி எதற்கு
    கரை சேர்ந்தபின் துண்டு மரக்கலம் எதற்கு...
    என்றிருக்கும் மனிதஜாதி

    ReplyDelete
  15. மெழுகுவர்த்தி பற்றிய கவிதை மிகவும் சிறப்பாக இருக்கிறது...

    ReplyDelete
  16. //ஆனால்
    அதன் தேடல் மட்டும்
    நலிந்த தகப்பனொருவனின்
    வாழ்க்கையை ஒத்திருந்தது//

    வலியச்சொன்னாலும் அழகாவே தெரியுதுங்க... கடைசியொன்று மிக நன்று...உண்மையும்கூட....

    ReplyDelete
  17. "கருகிய திரியின் முனையிலிருந்து
    வலியோடு மேலெழும்பும் புகையின் கேள்வியை"
    எத்தனை திரிகளை அணைத்திருப்பேன் ...
    எந்த அர்த்தமுமின்றி ....
    நன்றியுணர்வு என்ற சொல் மனித குலத்தோடு எவ்வகையில் தொடர்புடையது ?
    திரிகள் மெழுகுவர்த்தியில் மட்டும் காணப்படுவதில்லை !

    நன்றிகள் தோழர் தங்கள் வரிகளுக்கு !

    ReplyDelete
  18. க‌விதைக‌ள் ந‌ன்று

    ReplyDelete
  19. பிடித்துயிருக்குங்க.. கடைசி ரெண்டு ரொம்ப பிடிச்சுயிருக்கு :)

    ReplyDelete
  20. ரொம்ப வித்தியாசமான வரிகள்.
    வலியின் வெளிப்பாடுகள். இருந்தாலும் நல்லா இருக்கு.

    ReplyDelete
  21. இத்தனை அழகா ஒரு திரியின் வலியைச் சொல்ல முடியுமா?

    நன்று!

    எல்லாமே கவித்துவம் நிறைந்து அழகாய் மிளிர்கிறது.

    ReplyDelete
  22. ரசனைக்காரருங்க நீங்க!

    மூணுமே முத்தான கவிதைகள்!

    ReplyDelete
  23. ஆம். அப்படித்தான் நடந்து விடுகிறது.
    அவசரத்துக்கு உதவியவர்களை
    மறந்து விடுகிறோம் மெழுகுவர்த்தியைப் அணைப்பது போல்.
    அனைத்து கவிதகளும் நன்று.

    ReplyDelete
  24. மூன்று கவிதைகளுமே ரொம்ப நல்லாருக்கு கமலேஷ்.

    இரண்டாவது கவிதையில் நீங்கள் உங்க அப்பாவை பார்த்திருக்கலாம். நான் என் மகனை பார்த்தேன்.

    கூட்டினில் பசியோடிருக்கும்
    குஞ்சுகளுக்காக
    இறை தேடும் இப் பறவையின்
    கால்களில் இருக்கும் நடுக்கத்தை
    கண்களில் தெரியும் தவிப்பைக் கொண்டு
    என் மகனைப் பார்த்தேன்,

    என் அப்பாவைப்
    போல்தான் இருந்தான்.

    அவர் மகனைப் போன்ற அவன்.

    ReplyDelete
  25. முதல் கவிதை மிக அழகு.

    ReplyDelete
  26. எனக்கு மிக நெருக்கமாயிருக்கிறது இக்கவிதைகள் ...


    முதலாவது திரும்ப திரும்ப வாசிக்கப்படுகிறது ..
    என் இப்போதைய நிலைக்கு மிகவும் பொருந்தி போகிறது ..இன்றைய பொழுது எப்படி போகப் போகிறதென்று தெரியவில்லை நண்பா :(

    ReplyDelete
  27. ஹையோ முன்றுமே அற்புதம் கமலேஷ்.. மெழுகுக்கு செய்த துரோகம். நலிந்த தகப்பன். வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சாப்பிடும் வயிறு...ம்ம்ம்..என்ன சொல்ல உண்மைதான்

    ReplyDelete
  28. //எனக்கு மிக நெருக்கமாயிருக்கிறது இக்கவிதைகள் ...


    முதலாவது திரும்ப திரும்ப வாசிக்கப்படுகிறது ..
    என் இப்போதைய நிலைக்கு மிகவும் பொருந்தி போகிறது ..இன்றைய பொழுது எப்படி போகப் போகிறதென்று தெரியவில்லை நண்பா//
    ஜெனோவின் இந்த வார்த்தைகளில் முழுவதுமாக நானும் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  29. முதல் இரண்டும் அற்புதம்.

    //கருகிய திரியின் முனையிலிருந்து
    வலியோடு மேலெழும்பும் புகையின்
    ஏன் ? என்ற கேள்வியை
    என்ன செய்ய போகிறீர்கள்.//

    நெடுநாள் நினைவிலிருக்கும் அருமையான வரிகள் கமலேஷ். சபாஷ்.

    ReplyDelete
  30. கவிதை ரொம்ப நல்லா இருக்கு...பாராட்டுக்கள்!

    ReplyDelete