Wednesday, September 29, 2010

கதவாயுதம்

பறந்தபடி கிளை மீது வந்தமரும்
ஒரு பறவையின் மடங்கும் சிறகைப் போல
அத்தனை இயல்பாய் இருப்பதில்லை
நிராகரிப்பின் போது அடைக்கப்படும் கதவுகள்

அறைந்து சாத்தப்படும்
ஒரு கதவின் முன்னால் நிற்க வாய்த்தவன்
தன் வாழ்நாளெல்லாம் ஒரு சிலுவை போல்
அக் கதவை சுமந்து திரிகிறான்.

கர்த்தரின் நடுநெஞ்சில் இறங்கும்
கடைசி ஆணியென ஒலிக்கிறது
ஒரு நிராகரிப்பின் போது
மூடிய கதவினில் நகரும் தாழ்.


சத்தத்தோடு மூடப்பெறும் கதவுகளை விட
பாறை போல் இறுகி கிடக்கும்
திறவாத கதவுகள்தான் எத்தனை அன்பானது.

ஒரு புத்தகத்தின்
பக்கங்களை புரட்டும் சுவாதீனத்துடன்
மூடப் பெறும் கதவுகளையும்,
மயானத்தில் எரியூட்ட போகும்
ஒரு சிதையின் முகத்தை மறைக்கும்
கடைசி வரட்டியையும்,
ஒரே நேர் கோட்டில் கண்டு
திடுக்கிட்ட பறவைகள்
தத்தம் வாழ்நாளில்
கதவுகளை தட்டுவதுமில்லை,
வைத்துக் கொள்வதுமில்லை.

.

Thursday, August 12, 2010

முயலும் உலவும் காடு.


பதிவுலகில் நான் என்னும் தொடர் பதிவிற்கு என்னை அழைத்த அப்பா ராஜாராமன், நண்பர் சீமான்கனி மற்றும் சகோதரி கயல்விழி அவர்களுக்கு நன்றி.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
கமலேஷ்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
கமலேஷ்தான் உண்மையான பெயர்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?
வெகுநேரமாய் யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு
இம் மாட்டு தொழுவத்தின் கதவு திறந்தேன்.

யூதாஸுக்கு பயந்து ஓடி வந்த இயேசு
வெளியில் மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தார்.

என்னவென்று நான் விசாரிக்க துவங்கிய கணம் -
தான் இவ்வுலகில் அவதரித்ததே முட்டாள்தனமென்று கூச்சலிட்டபடி
மீண்டும் மரியன்னையின் கருவறைக்குள் புகுந்து கொண்டார்.
(புரியலையில்ல, அப்படி ஒரு பிறழ்வுதான்)


4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?
சரியாபோச்சி, பிரபலப்படுத்த நான் என்னங்க இங்க பிரஷர் குக்கரா விக்கிறேன். (அநியாயமான கேள்வி பாஸ் இது)

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஒவ்வொரு காகிததிற்குள்ளும் உறைந்திருக்கும்
மரத்தின் இரத்தத்தை போல்,
ஒரு இளைஞனின் கையிலிருக்கும்

சிகரெட் சூட்டு தழும்பில்
ஆழத்தில் கிடக்கும் ஒரு தாவணி போல்,
என் பெரும்பான்மையான வரிகளில்
நானே புரையோடியிருக்கிறேன்

காரணம்: ஒரே ஒரு சொல்லெடுத்து இவ் உலகை பூட்டிவிட்டு
தனியே ஒரு கவிதைக்குள் அமர்ந்து
சத்தமாய் அழவும், சிரிக்கவும், முணுமுணுக்கவும் பிடித்திருக்கிறது.


6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இரண்டும் இல்லை.

உச்சிப்பொழுதில், காய்ந்த வயிறுடன்
செருப்பில்லாத கால்களோடு
தள்ளாடி தள்ளாடி ஒரு தண்ணீர் தொட்டி நோக்கி நகரும்
கைவிடப்பட்ட அனாதை கிழவனின் கடைசி நிமிடங்களை
நான் என்ன செய்ய ?

இறந்து போன ஒரு பறவையின் சடலத்தை
இலகுவாய் கடந்துவிட முடியாத இதயத்தை
நான் என்ன செய்ய ?

தலை கருகி, உயிர் வற்றி
வாழ்க்கை முடியப்போகும் கடைசி தருணத்தில்
நல்லெண்ணெய் இட்டு,

திரியை தூண்டிய சிறுமியை நோக்கி
நன்றி கலந்த வெளிச்சத்தோடு
கை கூப்பியபடி
எரியும்
ஒரு மாடவிளக்கை
நான் என்னதான் செய்ய?

அத்தகைய தருணங்களில் நான் செய்வது
வக்கிருந்தால் கிழவனுக்கு ஒரு பிடி சோறு,
பறவைக்கு ஒரு சொட்டு கண்ணீர்,
சிவனாகிய சிறுமிக்கி - இரு வரி கவிதை.


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?
நான் ஒத்தப் பிள்ளை பெத்தவங்க.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இரண்டும் பதிவுலகிற்கு வெளியில் உண்டு.

எண்ணை பிசுக்கு மற்றும் குங்கும வாசனை கலந்துலவும்
கலை நயமிக்க கோவில்களை காணும்போது பொறாமையும்,
தேவையில்லாமல் அங்கே உபரியாய் அமர்ந்திருக்கும்
தெய்வங்களை காணும்போது கோபமும் வருவதுண்டு.



9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?
முதல் பின்னூட்டத்தின் மூலம் கைகுலுக்கியவர் - நம்ம தலைவர் D .R .அசோக் .

நேரில் பாராட்டியது அறை நண்பன் ஸ்ரீதர்.
(இரவு பணி முடிந்து வந்து அசந்து தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி பாராட்டினான். பாவிப்பய.)

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.
அனைத்துமா, கூறலாமே...

என் இவ்வருட டைரியின் முதல் பக்கத்தில் கவிஞர் கார்த்திக் முருகனின்
இந்த கவிதையை எழுதி இருக்கிறேன்.இப்படி இருக்கவே ஆசையும்படுகிறேன்.


கூடடைய விரும்பாததொரு
கரும் பறவை

இரை தேடிச் செல்லும்
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகளை
பிரசவித்துச் செல்கிறது.

பூச்சரம் போல முழம் முழமாக நீண்டு கொண்டே போகும் இத் தொடர் பதிவில் நான் முடிய நினைக்கும் மல்லிகைகள்

மார்க்கண்டேயன்.
வினோத் நிலா
,

geetha
மற்றும்
hemikrish .

.

Tuesday, July 20, 2010

வலியோடு கலையும் கனவு

வெயிலும், மழையும்
புனையலாடி திரியும் பொழுதொன்றில்
பிரசவிக்க துவங்கிய
வானவில்லின் அடிவாரத்தில்
காத்திருந்தேன்
என் ராஜகுமாரனுக்காக

சொட்டும் வர்ணங்களிலிருந்து
இறங்கி வந்தவன்
என் விரல்களைப் பிடுங்கி கொண்டு
ஓர் வீணையைப் பரிசளித்தான்.

கனவுகள் இறைக்கும் இதயத்தோடு
அவனை அழைத்துப்போய்
ஆர்ப்பரிக்கும் என் கடலை
அறிமுகப்படுத்தினேன்.

ஒரே மடக்கில்
அக் கடலை எடுத்துக் குடித்தவன்
வறண்ட பாலைவனத்தை வீசியெறிந்தபடி
அலட்சியமாய் செருமிக் காட்டினான்.

கண்ணீர் அவிழ்ந்து
காட்சிகள் உடையும் கண்களுடன்
மெல்லிய விசும்பலோடு
இது என் வானம் என்று
ஊனக்கைகளை உயர்த்திக் காட்டினேன்.

சூரியன் உதிரும் அளவிற்கு
அதை எடுத்து உதறியவன்
கக்கத்தின் வியர்வையைத் துடைத்தபடி
என்னை பழிக்கத் துவங்கினான்.

வேர்களைப் பொசுக்கும் நெருப்பில்
பொறுமையிழந்து வெடிக்கும்
மூங்கில் காடென
இது என் நீண்ட பெருவனம்
இதை நீ என்செய்வாய் என்றேன்.

ஒரு வாத்துக் கூட்டத்தை மேய்ப்பவன் போல
தன் கைத்தடியால்
மொத்த மரங்களையும் விரட்டியடித்தவன்
பொட்டல் வெளியில் நின்று
பலமாய் சிரிக்கத் துவங்கினான்.

இறுதியாய் வேறு வழியின்றி
என் சிறகிலிருந்து
இரத்தம் தோய்ந்த இறகொன்றைப் பிடுங்கி
மெல்லிய புன்னகையுடன்
அவன் கையில் கொடுத்தேன்.

கனம் தாளாமல்
சரியத்துவங்கினான்.

.

Monday, July 5, 2010

தோற்றப் பிழை.

வேட்டைக்கு வந்த நீங்கள்
மானோ, புலியோ
எதுவும் கிடைக்காத பட்சத்தில்
கனத்த மவுனத்தோடு திரும்பியிருக்கலாம்.

வெறுங்கையோடு திரும்பும்
வேட்டைக்காரனின் கெளரவம் குறித்து
யோசிக்கும் உங்கள் கண்கள்
அதோ ஓர் பறவை என்றதும்
குதூகலிக்கிறீர்கள்

உங்களின் சின்ட்ரெல்லா பொம்மைக்கென
என் சிறகுகளை பிய்த்துக் கொள்கிறீர்கள்.

உங்கள் தொட்டி மீனின்
இரைக்கு உதவுமென
நீலம் பாரித்த என் கண்களை
பிடுங்கி கொள்கிறீர்கள்.

என் கூடு அமைந்திருக்கும் கிளை
மகனின் கவன் வில்லுக்கு
சரியான கவட்டையென
உங்களின் கோடாரி முடிவெடுக்கிறது.

உங்களின் செய்கைகள் எதையும்
நான் தடுக்காதது குறித்து
ஆச்சர்யமாய் யோசிக்கிறீர்கள்

பின்
கோபமாய் அந்த கிளையை
வெட்டி வீழ்த்துகிறீர்கள்.
என்னை திரும்பி பார்க்கிறீர்கள்.

நான் பாடிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு பறவைக்கு இத்தனை திமிராயென்று
என்னை தரையோடு தேய்த்துவிடும்
நோக்கத்தில்
உங்களின் பாதங்கள் நெருங்குகின்றன.

இப்போதும் உங்களை நான்
தடுக்கும் உத்தேசமில்லை

ஏனென்றால்...

நான் பறவை இல்லை.

.

Wednesday, June 23, 2010

மஞ்சள் தடவிய மரணப் பத்திரிக்கை.

உன் மௌனம் பாய்ந்து
சிதைந்து போன
என் இதயத்தின் துணுக்குகளை
சேகரித்துக் கொண்டே கேட்கிறேன்.

அதற்க்கு முன்
உன் நாசியினில் ஓர்
கைக்குட்டையை கட்டிக் கொள்.

ஏனெனில்
உன்னால் காயம் பட்ட
என் சுவாசப் பைகளிலிருந்து
இரத்தத்தின் வாடை வீசக் கூடும்.

*
நரமாமிசம் தின்னும்
இந்த செவிட்டு உலகின் பிடியிலிருந்து
என்னை ரட்சிக்கும் பொருட்டு
நம் நிறை மாத சிசுவை
இரையிடுகிறேன் என்கிறாய்.

நீரிலிருந்து ஈரம் கழித்த பின்
பாவி ! மிச்சமென்னடி
இன்னும் மிச்சம்.

ஒற்றை சிறகை இழந்த பறவை
முறிந்த கிளையில் அமர்ந்து
உறைந்த முகாரியை
எத்தனை காலம் இசைக்குமென
எண்ணித் துணிந்தாயா இக் கர்மம்.

இதோ -
துடிக்க துடிக்க
என் காதலை புசிக்கிறது பார்
உன் பெரு மௌனம்.

*
சலனமற்று நீ நீட்டும்
இந்த உன் மண ஓலை
உறையிடப்பட்ட எனது கல்லறை

நடுங்கும் விரலோடு
மெல்ல மயானத்தின்
கதவுகள் திறக்கிறேன்.

அங்கே அச்சிடப்பட்டிருக்கிறது
என் மரணத்தின் தேதி.

*
இக் கவிதையின்
இறுதி ஊர்வலத்தில்
எதிரொலிக்கும் பறையோசையில்
உனக்காக நான் விட்டு போவது
ஒற்றை குறிப்பை மட்டும்தான் தோழி.

என் தீர்ப்பின் முற்றுப் புள்ளியில்
நீ ஒடித்த பேனா முனையென
உன் இமையிலிருந்து
ஒரு சொட்டுக் கண்ணீர்
எனக்காக முறியுமெனில்
உன்னை மன்னித்ததின் அடையாளமாய்
எரியும் என் சிதையிலிருந்து
பிறண்டு விழும் ஓர் விறகு.

.

Saturday, June 19, 2010

நீ தந்தவை...



உன் சிவந்த உதடு பிரித்து
நாவை வெளியில் நீட்டி
சுழற்றுகிறாய்.
பொறி தட்டிய பிரம்மன்
மையத்திலாடும் மகரந்தத்தோடு
செய்ய துவங்குகிறான்
ஒரு செம்பருத்தியை.

*
குளித்தது போதுமென்று
நீ கரையேறி விட்டாய்.
திரும்பி பார்.
உன்னை பிரிய முடியாமல்
பின்னால் ஓடி வருகிறது
நதி.

**
சுழித்துக்கொண்டோடும்
இந்த வரிகளும்,
இந்த வரிகளின் படுகையில்
படிந்து கிடக்கும் வலிகளும்,
உனக்கு சொந்தமானவை.
ஏனென்றால்
இவை
நீ தந்தவை.

.

Monday, June 14, 2010

சொல்லத் தெரியாதவை...


1 .
நல்லது.
ஒரே முயற்சியில்
சுடரை
மிகச் சரியாக
ஊதியனைத்து விட்டீர்கள்.
ஆனால்
கருகிய திரியின் முனையிலிருந்து
வலியோடு மேலெழும்பும் புகையின்
ஏன் ? என்ற கேள்வியை
என்ன செய்ய போகிறீர்கள்.

சூரியன் வந்த பிறகு
இச் சிறு சுடரின் தயவெதற்கென
ஒற்றை வரியில் கடந்து விடலாம்தான்

என்றாலும்,
அவ்வரிகளை கொஞ்சம்
அழுந்தச் சொல்லுகையில்
உங்கள் இரவுகளெங்கிலும்
மெல்லிய துரோகம் கசிகிறது.

2 .
கூட்டினில் பசியோடிருக்கும்
குஞ்சுகளுக்காக
இரை தேடும் இப் பறவையின்
கால்களில் இருக்கும் நடுக்கத்தையோ,
கண்களில் தெரியும் தவிப்பையோ
எப்படி சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால்
அதன் தேடல் மட்டும்
நலிந்த தகப்பனொருவனின்
வாழ்க்கையை ஒத்திருந்தது

3 .
எனக்கு சொந்தமான
வாழ்க்கையின் பெரும் பகுதியை
தின்று விடுகிறது -
என் வயிறு

.

Wednesday, May 19, 2010

தடாக குறிப்புகள்...

குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.

இன்னும் மலராத மொட்டுக்கள் சில
ஆடிக்கொண்டிருக்கின்றன,
கட்டிலில் குலுங்கும்
பெண்ணின் தனங்களையொத்து.

தன் மேல் கிடக்கும் துளிகளை
நட்சத்திரங்களாக்கி உருட்டி விளையாடுகின்றன,
தடாக புரசை இலைகள்.

குளத்தில் கிடக்கும் சூரியனை
அலகில் கொத்தி கொண்டு பறக்கிறது,
பெரும் பசி கொண்டதொரு
மீன்கொத்தி.

நீரில் நகரும் மேகத்தின் இடுக்குகளில்
ஓயாது சலம்பிக் கொண்டேயிருக்கிறது,
மின்னலை பூசிக்கொண்ட
மதம் பிடித்த மீன் ஓன்று.

அட்டை இல்லா புத்தகமென
திறந்து கிடக்கும் இக் குளக்கரையில்
புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை.

சட்டென நீரிலிருந்து
யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
செழிப்பான தேகத்திலிருந்து
சொட்டிக் கொண்டே இருக்கின்றன
இச் சொற்கள் யாவும்.

.

Monday, May 3, 2010

இலந்தை பூக்கள்...

தோழி கயல் விழி சண்முகம் அவர்கள் "பதின் வயது நினைவுகள்" என்னும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அடர்த்தியான வேலை பளு, அதன் தொடர்ச்சியாய் அடிவயிற்றில் நிகழ்ந்த ஒரு அறுவை சிகிச்சை. இப்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறேன். ஆதலால் தாமதத்திற்கு தோழி மன்னிக்க...

பதின்ம வயது என்றதுமே எனக்குள் வந்து போவது....

- "நாண் அறுந்த ஒரு யாழ்" -

இப்பொழுதும் கூட அதனை இழுத்துக் கட்டி இசைக்கலாம்தான், என்றாலும் என்னிடத்தில் தற்போது விரல்கள் இல்லை. பெரும்பான்மையான கவிஞர்களின் பேனா மூடியை ஏதோ ஒரு தேவதைதான் திறந்து வைத்திருப்பாள். அப்படியே ஒருவள் என் ரோமின் தெருக்களிலும் பாடித் திரிந்தாள்.

இடம் : மாரகுடி வரப்பு
வருடம் : மங்கலாக இருக்கிறது...


நான் வேட்டைக்கு போன இலந்தை மரத்தின் அடியில் அந்த சிறுமி நின்று கொண்டிருந்தாள். வெகு திருத்தமான முகத்தில் நெடு நேர தேடலின் களைப்பும், எதுவும் கிடைக்காத வெறுமையும் பரவிக் கிடந்தது. நான் அவளை சற்று தள்ளியிருந்த மரத்தின் தணிந்த கிளைகளை லாவகமாய் பற்றி பலமாக உலுக்க துவங்கினேன். சட சடவென பழங்களும், காய்களுமாய் விழும் இசையை கேட்டு ஓடி வந்தவள் நான் முறைத்து பார்க்கவும் அப்படியே உறைந்து போய் நின்றாள். நான் மேலும் சில கிளைகளை உலுக்கி தயாராய் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை கர்ப்பவதியாக்க துவங்கினேன். என் எதிரே வந்து நின்றவள் மெல்ல மெல்ல சொற்களை அவிழ்த்தாள். இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா?.... குரலில் ஒரு மழலை இருந்தது. அவளின் கேள்விக்கு அர்த்தம் புரிந்தவனாக ஐந்தாறு பழங்களை அள்ளி அவள் கையில் கொடுத்த படி நீ எந்த ஸ்கூல் என்றேன். நீங்க படிக்கிற அதே ஸ்கூல்தான் என்று சொல்லவும் நான் ஆச்சர்யமாகி என்னை இதுக்கு முன்பே உனக்கு தெரியுமா என்றேன் . சட்டென உற்சாகமானவள், ம்...சாயங்காலம் பிரேயர்ல நீங்கதான டெய்லி குறள் படிப்பீங்க என்றாள். தான் அதே ஸ்கூலில் ஐந்தாவது படிப்பதாகவும் பெயர் தேவிகா என்றும் சொன்னவள் இரை தேட சென்ற பறவை போல மீண்டும் தன் கேள்விக்கே திரும்பினாள். நீங்க இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா???? இல்ல, இதை என் தம்பி தங்கச்சிக்கு எடுத்திட்டு போறேன் என்றேன். மிகவும் தயக்கத்தோடு எனக்கும் இரண்டு தங்கச்சி இருக்கு, அதுங்களுக்கும் அஞ்சஞ்சி பலம் தருவீங்களா???? என்றாள். அவள் இழுவையில் இருந்த அந்த இசை குறிப்பு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் சரி, வாங்கிக்க என்றதும் சட்டென நீலப் பாவாடையை பாத்திரமாக ஏந்தினாள். நான் பையில் இருந்த பழங்களில் கணிசமான ஒரு பகுதியை சரிக்க இதை சற்றும் எதிர் பாராதவள் விழிகள் விரிய நாளைக்கும் நீங்க இங்க வருவீங்களா என்றாள். நான் "ம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிறகு தரித்த மான் குட்டியாக அவள் வீட்டை நோக்கி ஓடத் துவங்கி இருந்தாள். அதுவரை காய்களும், பழங்களும் மட்டுமே இருந்த இலந்தை மரத்தில் அன்றுதான் நண்பர்களே நான் பூக்களை கண்டேன்.

மறுநாள் அதற்கு பக்கத்திலிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் சனல் சாக்கை விரித்து, வைக்கல் பிரியை தலைக்கு கொடுத்தபடி பள்ளி கொண்ட ரெங்கநாதனாக ராணி காமிக்ஸ்குள் மூழ்கி போயிருந்தேன். சட்டென தலை பக்கமாய் மூச்சிரைக்க ஓடி வந்து அமர்ந்தவள் எனக்கெதிரே மூடிய கைகளை நீட்டி, பின்பு மெதுவாக விரித்தாள். "சில நெல்லி கனிகள்". இங்கு..இங்கு... இங்குதான்.... நண்பர்களே நிச்சயமாய் நான் இடறி போயிருக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாளே அவளுக்காக வெடி காய்களை தேடி கொண்டு வந்திருக்க மாட்டேன். வெடி காய் என்பது கிராமத்து மாணவர்களிடம் வெகு இணக்கம். நெல் மணியை போலவே ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். அதை எச்சிலால் ஈரப்படுத்தி யாருடைய சட்டை காலர் இடைவெளியிலாவது தெரியாமல் வைத்து விட்டால் போதும். ஐந்து வினாடிகளுக்குள் அது பட் என்ற சிறு சத்தத்தோடு வெடிக்கும். அப்போது அவர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் பின்னாங்கால் கொண்டு கழுத்து சொரியும் மிருகம் போல கைகளால் கழுத்தை மாறி மாறி தட்டி கொண்டிருப்பது பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

அய்! வெடி கா என்று சந்தோசத்துடன் வாங்கி கொண்டவள், அவள் பள்ளியில் நடந்த சில வெடி காய் நகைச்சுவை அனுபவங்களை வெகு சுவாரஸ்யமாய் சொல்லி அதற்க்கு அவளே சிரித்து கொண்டும் இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காகம் என் தலைக்கு மேல் அசிங்கம் செய்து விட்டது போல் “ச்சட்” என்று ஏதோ ஓன்று என் தலையில் விழுந்து தெரிக்கவும் நான் என்னையும் அறியாமல் பின்னங்கால் கொண்டு தலை சொரியும் மிருகமாகி போயிருந்தேன். நடந்தது என்னவென்று எனக்கு புரிந்த பொழுது வரம் கொடுத்த சிவன் தலையிலேயே வெடிகாய் வைத்த பெரிமிதத்தோடு தூரத்தில் இவள் நுரைக்க நுரைக்க சிரித்த படி ஓடிக் கொண்டிருந்தாள்.

வருடம்: 1993
இடம் : குரு டுடோரியல் சென்டர்,நன்னிலம்


அன்று ஆறாம் வகுப்புக்கு டியுசன் எடுக்கும் மிஸ் ஏனோ வராத காரணத்தினால் அருகில் இருந்த என் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து அமருமாறு பணிக்கப் பட்டிருந்தனர். முதலில் ஓடி வந்த தேவிகா என் அருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள். பாடம் எடுக்கும் உத்தேசம் இல்லாத அருணா மிஸ் அரையாண்டு தேர்வு விடை தாளை கொடுக்க துவங்கிய கணம், கமலேஷ் எந்திரிச்சு இங்க வா என்றார். நான் அவர்கள் கையிலிருந்த பிரம்பின் பயத்தைவிட இவளுக்கு முன்பு அடி வாங்க வேண்டுமே என்ற வலி மேலோங்க எழுந்து சென்றேன். விடை தாளை என் கையில் கொடுத்தவர்... நீ எழுதி இருக்கிற கடுரையை எல்லோருக்கும் கேட்குற மாதிரி நல்ல சத்தமா படி என்றார். நான் படித்து முடித்த வேளை கட்டூரைன்னா இப்படிதான் உணர்ச்சி பூர்வமா எழுதணும். ஆறு தன் வரலாறு கூறுதல்னா ஆறே எழுந்திருச்சி வந்து இப்படிதான் பேசுற மாதிரி இருக்கணும். இவன் பேப்பர வாங்கி எல்லோரும் இன்னொரு தடவை படிச்சு பாருங்க என்று கூறிக் கொண்டே என் தோளில் கை வைத்தவர் முழு ஆண்டு பரீட்சைக்கு இந்த கட்டுரை மட்டும் வந்துச்சி இதை படிக்கிற வாத்தியார் இதுக்காகவே உன்னை பாஸ் போட்ருவாரு, போய் உட்காரு என்றார். பெருமை பிடி பட தேவி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அன்றிலிருந்து அருணா மிஸ்சும், தமிழ் பாடமும் மிகவும் பிடித்துப் போய் இருந்தார்கள்....

வருடம் : 1997
இடம் : என் வீடு, நன்னிலம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சியுற்ற நான் தொழிற்கல்வி பயில சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அந்த நெருக்கமான நகரத்தின் தார் சாலையில் என் களத்து மேடும், என் கிராமத்து சிநேகிதியும் தொலைந்து போய் இருந்தார்கள். கிட்ட தட்ட பத்து மாதங்கள் கழித்து நரகாசுரன் இறந்ததை கொண்டாட ஊருக்கு வந்திருந்தேன். என்னை பார்க்க வந்தவளிடம் ஏக போக வித்தியாசம். புதிதாக தாவணி அணிந்திருந்தாள்.கண்களில் வசீகரம் கூடி இருந்தது. அப்போது வந்த அப்பா, இந்த பத்து மாசத்துல நீ எப்ப வருவ எப்ப வருவன்னு இந்த புள்ள ஒரு நூறு தடவையாவது கேட்டிருக்கும்டா என்றார். ஓயாது சிறகடித்து கொண்டே இருக்கும் வண்ணத்து பூச்சி போல எதையாவது பேசிக்கொண்டே இருப்பவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்று கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத நேரம் திடிரென ஒரு காகிதத்தை என் கையில் தினித்து விட்டு ஓடிப் போனாள். பிரித்தேன் . "மாலை பிடாரியம்மன் கோவிலுக்கு வரவும்". அந்த நாட்களுக்கு பிறகு என் ஹார்மோன்கள் என்னை முட்டாளாக்க துவங்கின. இல்லாத என் மீசையை சவரம் செய்ய துவங்கினேன். எப்படி திருப்பினாலும் என் திசைமானி அவளின் திசையையே காட்ட துவங்கியது.

வருடம் : 2002
இடம் : மயூரநாதர் ஆலயம், மயிலாடுதுறை.


மதிய நேரம் என்பதால் ஒரு கண்ணை இறுக்க மூடி கொண்டு ஒரு கண்ணால் மட்டும் வெளி உலகை பார்த்துக் கொண்டிருந்தது கோவில் வாசல். பிரகாரத்தில் அமர்ந்திருந்த நாங்கள் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம். திருமணதிற்கு பிறகு பிறக்க போகும் முதல் பெண் குழந்தைக்கு என் விருப்படி பெயர், "ஜனனி". மகனுக்கு அவள் விருப்பப்படி இன்னும் தேடி கொண்டிருக்கிறாள். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக என் சிறு வயது போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டியவள் இந்த போட்டோவுக்கு பின்னாடி கவிதை ஒன்னு எழுதிகொடுங்க என்றாள். எனக்கு அப்போது மிகவும் பிடித்து போயிருந்த...

அணு அணுவாய்
சாக முடிவெடுத்த பின்
காதல்
சரியான வழிதான் ....

என்னும் அறிவு மதியின் கவிதையை சொல்லி அதையே எழுதுவதாக சொன்னேன். வேண்டாம், வேண்டாம்.. உங்களோட கவிதையை.. உங்க கையாள.. எழுதுங்க. அழுத்தி,நிறுத்தி சொன்னாள். நான் சிரித்துக் கொண்டே நாளைக்கு வரும்போது வைரமுத்தோட "இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல" அப்படிங்கிற புத்தகம் கொண்டு வந்து தர்றேன். அதை முதல்ல நீ படி அப்புறமா என்னுடையதை கவிதையின்னே சொல்ல மாட்ட என்றேன். உங்களால இப்ப எழுத முடியுமா?. முடியாதா?...இப்போது அவளின் வரிகள் கொஞ்சம் சூடாக இருந்தது.இது எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் நிகழும் ஒரு ஊடல்தான். இவள் குடும்ப மலரில் வரும் கவிதைகளை மட்டுமே படிக்கும் குடத்து தவளை என்பதால் என் கிறுக்கல்களை பிடித்து போய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. என் கவிதைகளை இவள் ரசித்து பேசும் வேளைகளில் நான் என்னை சிறுமை படுத்தி கொள்வதில் ஒரு சந்தோசம் இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுத குனிந்த வேலையில், கவிதைக்குள்ள நீங்களும் நானும் இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க என்றாள்.
சரி, அப்ப இன்னொரு நாள் யோசிச்சு எழுதுறேன்....இல்ல, இல்ல.. இப்ப.. இந்த நிமிசம் உங்க மனசுல என்ன தோணுதோ அதை எழுதுங்க. சில நாட்களாகவே மனதில் உருண்டு கொண்டிருந்த வரிகளை கண்களை மூடி ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டு எழுத துவங்கினேன்.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
கவிதைகளாக
மலர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


வாங்கி படித்தவளின் முகத்தில் பெரும் அதிருப்தி.நான் உங்களை என்ன எழுத சொன்னேன்.நீங்க என்ன எழுதி வட்சிருகீங்க உங்களையும் என்னையும் சேர்த்து எழுத சொன்னா... நீ என்ன சொன்னியோ அதைதான் எழுதி இருக்கேன் நல்லா படிச்சு பாரு.
என் மீது நிலைத்திருந்த அவளின் பார்வை ஒரு டால்ஃபின் போல எகிறி வரிகளுக்குள் குதித்து நீந்தியது. நிமிர்ந்தவள், இல்ல ஒன்னும், உங்களோடது கானல் வரி; நான் படிக்கும் போது கவிதையாகுதுன்னு எழுதி இருக்கீங்க என்று சிணுங்க துவங்கினாள். அவளின் கண்களையே சில நொடிகள் உற்று பார்த்து விட்டு பின்பு மெதுவாய் சொன்னேன்.கவிதையில உள்ள ஒவ்வொரு வரியிலையும் முதல் எழுத்தை மட்டும் மேலிருந்து கீழா படி. மீண்டும் டால்பின் குதித்தது.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
விதைகளாக
லர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


விளங்கி கொண்டவளின் உலகத்திற்கு அது போதுமானதாய் இருந்திருக்க வேண்டும்., விழிகள் முழுவதும் காதல் பொங்க வரிகளை அழுத்தி முத்தமிட்டாள். அவளின் உதடு பட்டு உயிர் கொண்ட எழுத்துக்கள் வண்ணத்து பூச்சியாகி பறந்தது.


Wednesday, February 17, 2010

நிறையழிதல்...

விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்
கூடியிருந்த கூட்டுப் புழுவொன்று
வண்ணத்துப் பூச்சியாகி
வனமேகியது
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.

.

Wednesday, February 10, 2010

சிலரின் இலக்கிய சேவைகள்...


ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.

அவன் படைப்புக்களை
இவன் விமர்சனத்தில்
குழி தோண்டி புதைத்தான்

இவன் விமர்சனத்தை
அவன் கவிதைகளால்
எரியுட்டினான்.

சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.

--------------------------------------------------------------------------

முற்றும்.

மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.

.

Wednesday, January 20, 2010

விழுந்தவனுக்கு ஒரு கடிதம்...

எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்

கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்

நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...

மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு

நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,

புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!

இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்

நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை

இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு

வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்

கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற

உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!

தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று

இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்

ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்

தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு

இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.

- ( ஒரு தோல்வியின் அடிவாரத்தில் அமர்ந்து
எனக்கு நானே எழுதிக்கொண்டு
எழுந்து வந்த வரிகள் இது.
2004 பழைய டைரி குறிப்பிலிருந்து ) -


Thursday, January 14, 2010

முதிர் கன்னியின் பிறழும் இரவு...

என்னுடைய எல்லா இரவுகளிலும்
வந்து அமர்ந்து கொள்கிறது
உருவமில்லா ஒரு யாளி

அதன் பசிக்கு
என் உறக்கம் தின்று
தாகத்திற்கு
என் கண்ணீர் குடிக்கிறது

ஒற்றையில் எறியும்
இந்த மெழுகுவர்த்தி
செல்வியாக புலரும்
என் இரவுகள் குறித்து
அழுது தீர்க்கிறது

முயங்கி கிடக்கும்
இரு சுவர்கோழி கண்டு
துளிர்க்கும் ஹார்மோனில்
தேனீக்களின் கொடுக்குகள்

கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல

பழுப்பேறிய
என் வயதின் வலியில் பூத்த நெருப்பில்
கருகும் கண்ணகியின் கால்சிலம்பு
மாதவியின் குங்குமத்தின் மீது படிகிறது

புழக்கமற்று கிடக்கும் ஒரு
புல்லாங்குழலின் வலியை
விலை பேசும் நீங்கள் அறிய
வாய்ப்பில்லை

நேற்று
சாமத்தில் குறி சொன்ன கோடாங்கிக்கு
காலையில் நான் கொடுத்த
முளை கட்டிய பயிறு
ஏதேனும் குறிப்பை
உணர்த்தியிருக்க கூடும்

இன்றிரவு
நான் கதவை.
தாழிடப் போவதில்லை.

.

Monday, January 4, 2010

நீரியல் சுழற்சி...


தேங்கி கிடக்கும்
நீர் நிலை நான்
என்மீது கவிழ்ந்து படுக்கும்
சூரியனின் கதிர்வீச்சு நீ -
தொடங்கியது ஆவியாதல்.

என் இதழோடு இதழ் கவ்வி
நீ உறுஞ்சிய தேவகனத்தில்
தன்னிலை மறந்த நான்
தொலைந்து போகிறேன்
காற்றின் பெருவெளியில்.

உன் முத்தத்தில் முக்தி பெற்று
வெட்கத்தில் விலகி ஓடி நிற்கிறேன்
தூர வானத்து கார்முகிலாய்.

உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி.

நீ பிரிந்து போகும் இரவுகளை
நினைத்துக் கொண்டவள்
உன் மார்பில் முகம் புதைத்து
ஒரு பெருமழையென
குலுங்கி அழுகிறேன்.

உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள் .

.