Friday, March 25, 2011

சித்தார்த்தன் கனவு.

இந்த கவிதை
நடனமாடியபடி நகர்ந்து செல்லும்
சொற்களின் ஊர்வலமல்ல,
ஒவ்வொரு சுள்ளியாய்
கொண்டு வந்து கட்டிய
பறவையின் கூடும் அல்ல.

இந்த கவிதை
மொக்கவிழ்ந்த இந்நொடிகளின்
வாசனையல்ல,
கிழித்த நாட்காட்டியிலிருந்து வழியும்
இரத்தமும் அல்ல

இந்த கவிதை
கவிஞனொருவன் தன் இருப்பை வெளிப்படுத்த
சொற்களில் பீய்ச்சும் வெளிச்சம் அல்ல,
மேடை நடிகனொருவன்
ஒப்பனை கலையும்
அந்தரங்க அறையும் அல்ல.

இந்த கவிதை
இரு ஜோடி உதடுகளின் இடைவெளியில்
ஊறிக்கொண்டிருக்கும்
ஒரு முத்தத்தின் சுடரல்ல,
இன்னும் வெம்மையடங்காத
தகப்பனின் எரிந்த சிதையிலிருந்து
அஸ்தி சேகரிக்கும் ஒரு சிறுவனின்
நடுங்கும் மௌனமும் அல்ல.

விடிந்த பின்னரும் எரிந்தபடியிருக்கும்
அணைக்க மறந்த தெருவிளக்கின்
இரவை புணர்ந்த நினைவல்ல,
உச்சத்தில் முறியும் உடலல்ல,
காலமல்ல,..
கருணையல்ல...

இந்த கவிதை -

காற்றில்
சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள் ,

வேண்டுதல் எதுவுமற்ற
ஓர் பிரார்த்தனை,

உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.


அல்லது
எதிர்வரும் பாதசாரி
எதிர்பார்ப்பில்லாமல் வீசிப்போகும்
ஓர் மாசற்ற புன்னகை,


43 comments:

Ashok D said...

நல்லாதான் இருக்கு

இந்த கவிதை :)

Chitra said...

இந்த கவிதை -
காற்றில் சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள் ,

வேண்டுதல் எதுவுமற்ற
ஓர் பிரார்த்தனை,

உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.



.....மென்மையான அழகு! very nice.

பா.ராஜாராம் said...

beautiful-டா!

விஜய் said...

வாழ்த்துக்களை வாரியணைக்கும் வர்ணனை

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

ஹேமா said...

கமலேஸ் நிறைய நாளுக்கப்புறம் அழகான கவிதை பறவையின் சுவடாக குழந்தையின் புன்னகையாக !

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

மச்சான் கேட்டப்ப இருந்தத விட, படிக்கறப்ப ரொம்ப நல்லாயிருக்கு.

\\ இந்த கவிதை
இரு ஜோடி உதடுகளின் இடைவெளியில்
ஊறிக்கொண்டிருக்கும்
ஒரு முத்தத்தின் சுடரல்ல\\

,,,,,,,,,,,,,,,,,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்

Anonymous said...

எழுத்தோசையின் கைத்தட்டல் ஓசை கேட்கிறதா கமலேஷ்..கவிதை மழலையின் புன்னகைப் போன்றே அழகாய் சிரிக்கிறது பல வரிகள் மெய் சிலிர்க்கவும் செய்தது..

HVL said...

இந்த கவிதை
நடனமாடியபடி நகர்ந்து செல்லும்
சொற்களின் ஊர்வலமல்ல,


உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.

அல்லது
எதிர்வரும் பாதசாரி
எதிர்பார்ப்பில்லாமல் வீசிப்போகும்
ஓர் மாசற்ற புன்னகை

அழகான வரிகள்.

Unknown said...

Nalla irukkunga.

jothi said...

மிக‌ அழ‌காக‌ செதுக்க‌ப்பட்ட‌ க‌விதை.

ஆனால் த‌லைப்புதான் புரிய‌ல‌,.. ஏதாச்சும் பெய‌ர்கார‌ண‌ம் இருக்கா?

கமலேஷ் said...

@ அசோக்:
வாங்கன்னே, நலமா?
நன்றிண்ணே.

@ சித்ரா:
மிக்க நன்றி சகோதரி.

@ ராஜாராம்:
வாங்கப்பா. நன்றிப்பா.

@ விஜய்:
அண்ணே, எப்படி இருக்கீங்க.
நன்றிண்ணே.

@ஹேமா:
வாங்க சகோதரி
மிக்க நன்றி சகோதரி.

@ ஸ்ரீதர்:
இந்த ம்ம்ம்..சரியில்லையே.
நன்றி ஸ்ரீ.

@ தமிழரசி:
உங்க கவிதை படிச்சேன் சகோதரி.
ரொம்ப கஷ்டமா இருந்திச்சி.
சரியாகும் சகோ.கருத்திற்கு நன்றி.

@ HVL
வாங்க தோழரே
மிக்க நன்றி நண்பரே.

@செல்வராஜ்
மிக்க நன்றி கவிஞரே.

@ஜோதி.
ஆமாம் நண்பரே, கவிதையை
வேறொரு தளத்திலும் இயக்கும் முயற்சி.
சித்தார்த்தன் கண்ட கனவு / புத்தம் / இல்லாம/லிருக்கும் ஒரு இருப்பு.
மிக்க நன்றி நண்பரே.

நிலாமகள் said...

வாங்க கமலேஷ்... அல்ல அல்ல என்றவாறே சொல்லிச் செல்லும் விஷயங்கள் திகீர் திகீர் என அதிர்வை ஏற்படுத்த, தொடரும் கவிதை இறுதியில் சக மனிதனை எந்தவொரு எதிர்பார்ப்பும் அற்று சிநேகப் புன்னகைக்க போதிமரமாகிறது.

sakthi said...

கமலேஷ் வெகுவாய் ரசித்தேன்

தொடர்ந்து எழுதுங்கள்

'பரிவை' சே.குமார் said...

அழகான கவிதை.

Madumitha said...

நிச்சயமாக கமலேஷ்.
உங்கள் கவிதை உறங்கும் குழந்தையின்
புன்னகை போன்றதே.

ஹ ர ணி said...

நேர்த்தியான இழையோடும் கவிதை. புதுக்கவிதைக்கான இன்னொரு புது வரையறைக்கான வடிவத்திற்கான சான்றாக இக்கவிதையை எண்ணிப் பார்க்கிறேன். என்னுடைய வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி. இனி தொடர்ந்து வாய்ப்பமையும்போது வருவேன்.

சிவகுமாரன் said...

என்ன பின்னூட்டமிடுவது என்று தெரியாமல் தவித்துப் போய் நிற்கிறேன்.
கண் முன்னே ஒவ்வொரு வரியும் காட்சிகளாய் விரிகின்றன. அதுதான் உங்கள் கவிதையின் பலம்.
சுந்தர்ஜி படிக்கவில்லையே இந்த கவிதையை. தலையில் வைத்தல்லவா கூத்தாடுவார் .
மனம் திறந்த (சற்றே பொறாமையுடன்) பாராட்டுக்கள் கமலேஷ் .

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice one...

நிரூபன் said...

கவிதை என்னால் என்னவென்பதை விளக்கியிருக்கிறீர்கள்.

//உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள். //

அருமையான சொல்லாடல்கள்.

நிலாமதி said...

அழகு தமிழால் வர்ணிக்கும் கவிஞ்ச்னுக்கு வாழ்த்துக்கள்
.என் தளம்வ்ந்து என் தளம் வந்து கருத்திட்டு செல்லும் தங்க களை நன்றியுடன் நினைக்கிறேன் .

Pranavam Ravikumar said...

நல்ல கவிதை!

rvelkannan said...

என் குளத்தில் கல்லெறிந்து செல்கிறது
இந்த கவிதை கமலேஷ்

மாலதி said...

\\ இந்த கவிதை
இரு ஜோடி உதடுகளின் இடைவெளியில்
ஊறிக்கொண்டிருக்கும்
ஒரு முத்தத்தின் சுடரல்ல\\வாழ்த்துக்கள்

மிருணா said...

கவிதை முழுவதும் சொற்களின் அழகான நடை பயில்வு.இறுதி வரிகள் ஒரு தென்றல் போல மனம் விகசிப்பதாய்.

Sugirtha said...

இந்தக் கவிதை வாசிக்கும்போது, எதிர்பார்புகளை மெது மெதுவாக விலக்கி, பிறகு மிக இயல்பாக அணுகவைத்து, முடிவில் ஒரு அருமையான உணர்வை கொடுக்குது கமலேஷ்.
Welcome Back! :)

சீமான்கனி said...

//இந்த கவிதை -
காற்றில் சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள் ,

வேண்டுதல் எதுவுமற்ற
ஓர் பிரார்த்தனை,

உறங்கும் குழந்தையின்
சிரிக்கும் உதடுகள்.//

அருமை கமல் ஜி...ஊரில் இருந்து வந்தாச்சா??விரைவில் சந்திப்போம்....

மாலதி said...

இந்த கவிதை -
காற்றில் சிறகு பதியாமல்
கடந்து போகும்
ஒரு பறவையின் சுவடுகள்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இடைவெளியை இட்டு நிரப்ப எல்லோராலும் முடிவதில்லை கமலேஷ்.

சிலிர்க்க வைக்கும் எளிய சிறகின் தொடுதல் போன்ற வார்த்தைகளுக்காகவும் அபூர்வமான காட்சிகளின் அடுக்குகளுக்காகவும் இது அபாரமான கவிதையாகிறது.

இதை மறுபடியும் மறுபடியும் வாசிக்க என் கவிதை என்று உரிமை கொண்டாடும் பேராசையையும் கிளப்புகிறது.

கதவாயுதத்தை இந்தக் கவிதை தன் எளிமையின் வசீகரத்தால் போட்டிக்கழைக்கிறது.

கமலேஷ் said...

@ நிலாமகள்
நன்றி சகோதரி தங்களின் வருகைக்கும்
கருத்திற்கும்.

@ சக்தி:
நிச்சயம் நண்பரே. நன்றி நண்பரே.

@ சே.குமார்.
வாங்க குமார். மிக்க நன்றி குமார்.

@ மதுமிதா
மிக்க நன்றி மது சார். தங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும்.

@ ஹரணி
மிக்க நன்றி சார் தங்களின் ஊக்கத்திற்கு

@ சிவகுமாரன்.
வாங்க நண்பரே. நலமா.
உங்களின் வருகைக்கும்
மனம் திறந்த பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

@ தங்கமணி :
மிக்க நன்றி சகோதரி.

@ நிரூபன்.
மிக்க நன்றி நண்பரே.

@ நிலமதி
மிக்க நன்றி சகோ.
தொடர்ந்து எழுதுங்கள்.

@ ரவிக்குமார்.
மிக்க நன்றி நண்பரே.

@ மாலதி :
மிக்க நன்றி சகோதரி.

@ மிருணா.
மிக்க நன்றி சகோதரி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

@ சுகிர்தா
மிக்க நன்றி சுகிர்தா
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்.

@ சீமான்கனி
நண்பா. எப்படி இருக்கீங்க.
விரைவில் பேசலாம்.
நன்றி நண்பா..

@மாலதி
மிக்க நன்றி சகோதரி.

@ சுந்தர்ஜி.
மிக்க நன்றிண்ணே.தங்களின் தொடர்
வாசிப்பிற்கும், மனம் திறந்த பாராட்டுக்களுக்கும்.
என்றாலும் உங்கள் அருகில் என்னை அமர்த்தி பேசுவதை படிக்கும்போது
உதடுகளும் கூட கொஞ்சம் நடுங்க துவங்கி விடுகிறது
மீண்டும் நன்றிண்ணே.

சந்தான சங்கர் said...

இனிய தமிழ் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்..

சங்கர்.

அ.முத்து பிரகாஷ் said...

சித்தார்த்தனின் கனவு புத்தனின் வரிகளில் ...

maniajith007 said...

அருமையான கவிதை

Yaathoramani.blogspot.com said...

குழந்தையின் சிரிக்கும் உதடுகளும்
பாதசாரி எதிர்பார்ப்பின்றி வீசிப்போகும் புன்னனகையும்
நம்முள் விளைவித்துப்போகும் அதி அற்புதங்களை
படிப்பவருக்குள் இந்த கவிதையும்
ஏற்படுத்திப் போகிறது
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

கதம்ப உணர்வுகள் said...

ஒரு கள்ளம் கபடமற்ற குழந்தையின் புன்னகையாக இறைவனின் ஆசீர்வாதமாக மிக அருமையான வரிகள் கமலேஷ்... அன்பு வாழ்த்துகள் இயல்பான எளிய நடையில் அருமையான கவிதை சிறப்பு.

Sakthi said...

இந்த கவிதை...!

raji said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html

kovai sathish said...

பாராட்டுவதெற்கென ஒரு மொழி உண்டாக்க வேண்டும்...பிறகு உன்னை முதல் முதலில் பாராட்ட வேண்டும் உன் உவமைகளுக்காக....

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_11.html) சென்று பார்க்கவும்...

(இன்னும் தங்களின் பல பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன... படித்தேன்... வாழ்த்துக்கள்...)

திண்டுக்கல் தனபாலன் said...

மீண்டும் ஒருமுறை...


Visit : http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_28.html

Anonymous said...

வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_28.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Dino LA said...

மிக‌ அழ‌காக‌ செதுக்க‌ப்பட்ட‌ க‌விதை

rajanikanttabert said...

Mega Man: The Wily Wars [Wii U] - Casino Scoop 2021
Mega Man: The Wily Wars (Wii U) from Wii U is the latest installment in a series 바카라사이트 of side-scrolling platformer video 바카라사이트 game series featuring characters  Rating: 5 · ‎6 votes