Wednesday, February 17, 2010

நிறையழிதல்...

விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்
கூடியிருந்த கூட்டுப் புழுவொன்று
வண்ணத்துப் பூச்சியாகி
வனமேகியது
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.

.

Wednesday, February 10, 2010

சிலரின் இலக்கிய சேவைகள்...


ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.

அவன் படைப்புக்களை
இவன் விமர்சனத்தில்
குழி தோண்டி புதைத்தான்

இவன் விமர்சனத்தை
அவன் கவிதைகளால்
எரியுட்டினான்.

சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.

--------------------------------------------------------------------------

முற்றும்.

மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.

.