Thursday, January 14, 2010

முதிர் கன்னியின் பிறழும் இரவு...

என்னுடைய எல்லா இரவுகளிலும்
வந்து அமர்ந்து கொள்கிறது
உருவமில்லா ஒரு யாளி

அதன் பசிக்கு
என் உறக்கம் தின்று
தாகத்திற்கு
என் கண்ணீர் குடிக்கிறது

ஒற்றையில் எறியும்
இந்த மெழுகுவர்த்தி
செல்வியாக புலரும்
என் இரவுகள் குறித்து
அழுது தீர்க்கிறது

முயங்கி கிடக்கும்
இரு சுவர்கோழி கண்டு
துளிர்க்கும் ஹார்மோனில்
தேனீக்களின் கொடுக்குகள்

கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல

பழுப்பேறிய
என் வயதின் வலியில் பூத்த நெருப்பில்
கருகும் கண்ணகியின் கால்சிலம்பு
மாதவியின் குங்குமத்தின் மீது படிகிறது

புழக்கமற்று கிடக்கும் ஒரு
புல்லாங்குழலின் வலியை
விலை பேசும் நீங்கள் அறிய
வாய்ப்பில்லை

நேற்று
சாமத்தில் குறி சொன்ன கோடாங்கிக்கு
காலையில் நான் கொடுத்த
முளை கட்டிய பயிறு
ஏதேனும் குறிப்பை
உணர்த்தியிருக்க கூடும்

இன்றிரவு
நான் கதவை.
தாழிடப் போவதில்லை.

.

30 comments:

நட்புடன் ஜமால் said...

கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல]]

:( :( :(

Chitra said...

அதன் பசிக்கு
என் உறக்கம் தின்று
தாகத்திற்கு
என் கண்ணீர் குடிக்கிறது ....................... so sad! You have expressed it very nicely.

Paleo God said...

அட்டகாசம், ரசித்தேன்.

Tharshy said...

மிக மிக அழகான வலி நிறைந்த கவிதை…வாழ்த்துகள் கமலேஷ்…மிகவும் ரசித்து படித்தேன்..:))

'பரிவை' சே.குமார் said...

அட்டகாசம்

ரிஷபன் said...

கவிதை அதன் வார்த்தைகளின் எல்லையைத் தொட்டு விட்டது..

Ashok D said...

ரொம்ப நல்லாயிருக்குங்க கமலேஷ்

சீமான்கனி said...

//முயங்கி கிடக்கும்
இரு சுவர்கோழி கண்டு
துளிர்க்கும் ஹார்மோனில்
தேனீக்களின் கொடுக்குகள்//

//கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல//

//ஒற்றையில் எறியும்
இந்த மெழுகுவர்த்தி
செல்வியாக புலரும்
என் இரவுகள் குறித்து
அழுது தீர்க்கிறது//


அடடா அருமை கவி வரிகள் கமலேஷ்....மிக ரசித்தேன்...

பொங்கலோ பொங்கல்.....
இனிய பொங்கல் வாழ்த்துகள் ...

விஜய் said...

தூள் கமலேஷ்

வாழ்த்துக்கள்

(புழக்கமற்று )

விஜய்

Vidhoosh said...

ஒரு பெரிய கதையே கவிதையாகி விட்டதுங்க... அருமை

காமராஜ் said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
கவிதையின் கூர்முனை எல்லாவற்றையும்
தாண்டித் தாக்குகிறது. தலையணை இன்னும் ரொமபநாளைக்கு இந்தக் கவிதையை மட்டும் ஞாபகப்படுத்தும். வாராதிருந்தற்கு இழப்பு எனக்கே.
வாழ்த்துக்கள் கமலேஷ்.

ஜான் கார்த்திக் ஜெ said...

கமலேஷ் ரொம்ப அருமையா இருக்கு... அழகான வார்த்தைகளால் அழகான வெளிபாடு.. வாழ்த்துக்கள்..

குட்டிப்பையா|Kutipaiya said...

மிக அருமையான வரிகள்..

உயிரோடை said...

கவிதை கருத்து அருமை

ஹேமா said...

ஏக்கம் நிறைந்த கவிதை கமலேஸ்.
உணர்ந்து எழுதியதாகவே வரிகள் வலிக்கிறது.

ஜெனோவா said...

நான் தான் உங்களை அடைய தாமதப்படுத்திவிட்டேன் கமலேஷ் ...
மிக ஆழமானக் கவிதை ... காமராஜ் சார் சொன்னதுபோல தலையணைகள் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இந்த கவிதையை நினைவுபடுத்தும் - உண்மை ..

தொடர்வோம் நண்பா !
வாழ்த்துக்கள்

கமலேஷ் said...

@ ஜமால் : வருகைக்கு நன்றி ஜமால்
@ சித்ரா : மிக்க நன்றி தோழி
@ பலா பட்டறை சங்கர் : மிக்க நன்றி நண்பா
@ கொற்றவை : மிக்க நன்றி உங்களின் வருகைக்கும் கருத்துகளுக்கு
@ சே.குமார் : மிக நன்றி நண்பா
@ ரிசபன் : மிக்க நன்றி தோழா
@ அசோக் : மிக்க நன்றி அசோக்
@ சீமான் கனி : மிக்க நன்றி தோழா சவுதில உங்களுக்கும் எனக்கும் ஹோட்டல வேண்டுமானால் பொங்கல் உண்டு..
@ விஜய் : உங்களின் தொடர் ஊகத்திற்கு மிக்க நன்றி அண்ணா
@ விதூஷ் : உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி
@ காமராஜ் : உங்களை போன்ற மூத்த எழுத்தாளர்களின் கருத்துக்கள் எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் மிக்க நன்றி காமராஜ் அவர்களே...
@ ஜான் : உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே..
@ குட்டிப்பையா : உங்களின் தலத்தில் உள்ள கவிதைகள் மிக நன்று. உங்களின் வருகைக்கு மிக்க நன்றி
@ உயிரோடை லாவண்யா: உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி
@ஹேமா : உங்களின் விருது பெற்ற பதிவினை இப்போதுதான் படித்தேன் மிகவும் அருமை...உங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி தோழி
@ ஜெனோவா : வாங்க வாங்க நண்பா உங்களோடைய வருகையால் நான்தான் சதோஷம் அடைய வேண்டும் உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி...

Unknown said...

என்ன கவி !!!!!!!!!!!!!!!!!!!!!!!
கலக்கல் உண்மையாகவே

Sakthi said...

வணக்கம் நண்பரே , உங்கள் பதிவினை கண்டேன், வருநிக்கவும் வரையறுக்கவும் வார்த்தைகள் இல்லை நண்பரே.. தங்கள் கேள்விக்கான விடை இங்கே உள்ளது..

http://www.lakshmansruthi.com/tamilbooks/bharathiar/bharathi05.asp

Sakthi said...

5. பாரத தேசம்

பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார் துயர்ப் பகைகொல்லு வார்

சரணங்கள்
வெள்ளிப் பனிமலையில் மீதுலவு வோம், அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்,
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம் எங்கள்
பாரத தேச மென்று தோள் கொட்டுவோம் (பாரத)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் (பாரத)

வெட்டுக் கனிகள் செய்து தங்கம் முதலாம்
வேறு பலபொருளும் குடைந் தெடுப்போம்
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவை விற்றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டு வருவோம் (பாரத)

முத்துக் குளிப்பதொரு தென் கடலிலே,
மொய்த்து வணிகர் பல நாட்டினர்வந்தே
நத்தி நமக்கினியே பொருள் கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற் கரையிலே (பாரத)

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத்
தோணிக ளோட்டி விளையாடி வருவோம் (பாரத)

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளுவோம்
சிங்க மாராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்துங் தந்தங்கள் பரிசளிப்போம் (பாரத)

காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய்வோம்
ராசபுரத்தானத்து வீரர் தமக்கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப்போம் (பாரத)

பட்டினியில் ஆடையில் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென வீதி குவிப்போம்
கட்டித் திரவியங்கள் கொண்டுவருவார்
காசினி வணிகருக்கு அவை கொடுப்போம் (பாரத)

ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
ஒயுதல் செய்வோம் சாயுதல் செய்வோம்
உண்மைகள் சொல்வோம் வண்மைகள் செய்வோம் (பாரத)

குடைகள் செய்வோம் உழுபடைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்
நடையும் புறப்புமுணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)

மந்திரம் கற்போம் வினைத் தந்திரம் கற்போம்
வானையளப் போம் கடல்மீனையளப்போம்
சந்திரமண்டலத்தியல் கண்டு தௌiவோம்
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம் கற்போம் (பாரத)

காவியம் செய்வோம் நல்ல காடு வளர்ப்போம்
கலைவளர்ப்போம் கொல்லருளை வளர்ப்போம்
ஓவியம் செய்வோம் நல்ல Yஊசிகள் செய்வோம்
உலகத் தொழிலனைத்து மூவந்து செய்வோம் (பாரத)

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர் (பாரத)

கமலேஷ் said...

அட நம்ம அறஞ்சொல்லும் நெஞ்சதானோட இன்னொரு தளம்தான் "படித்த பிடித்த தமிழ்லா" இப்பதான் கவனிக்கிறேன்...உங்களின் இந்த உதவியை மறக்கவே முடியாது நண்பா சக்தி... கேட்ட அடுத்த நிமிடம் லிங்க்ஐயும் அனுப்பி பாரதின் பாட்டையும் அனுப்பி விட்டர்கள் மிக்க நன்றி தோழரே....உண்மையான ஒரு முண்டசுக்கு கவிஞன் பாரதியின் தீவிர ரசிகனுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்...

சீமான்கனி said...

am in jeddah...

Unknown said...

கமலேஷ்...!
அற்புதம்...அருமை...வாழ்த்துக்கள்!!

Sakthi said...

I JUST DID WHAT I CAN MY FRIEND.. ANYWAY THANK YOU VERY MUCH KAMAL FOR RECOGNIZING ME..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கமலேஷ்...அற்புதம். கவிதையின் ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு ஒலி.அந்த ஒலியை மீறிய
வலி அழகாய் மனதைத் தைத்தது!!

PPattian said...

மிக அற்புதமான கவிதை கமலேஷ்.. வலியும் வேதனையும் கவித்துவமாக..

//ஒரு பெரிய கதையே கவிதையாகி விட்டதுங்க... அருமை//

ரிப்பீட்டேய்...

கே. பி. ஜனா... said...

மனம் தொட்ட அருமையான கவிதை!

பா.ராஜாராம் said...

அருமையான கவிதை காமேஷ் இது.!

Gowripriya said...

மிக அருமை.. வாழ்த்துகள்..

சுரபி said...

///நேற்று
சாமத்தில் குறி சொன்ன கோடாங்கிக்கு
காலையில் நான் கொடுத்த
முளை கட்டிய பயிறு
ஏதேனும் குறிப்பை
உணர்த்தியிருக்க கூடும்

இன்றிரவு
நான் கதவை
தாழிடப் போவதில்லை...//

வேதனை.. :(