Wednesday, May 19, 2010

தடாக குறிப்புகள்...

குளத்தில் மிதக்கும் ஆகாயம் துளைத்து
பூத்திருக்கிறது தாமரை.

இன்னும் மலராத மொட்டுக்கள் சில
ஆடிக்கொண்டிருக்கின்றன,
கட்டிலில் குலுங்கும்
பெண்ணின் தனங்களையொத்து.

தன் மேல் கிடக்கும் துளிகளை
நட்சத்திரங்களாக்கி உருட்டி விளையாடுகின்றன,
தடாக புரசை இலைகள்.

குளத்தில் கிடக்கும் சூரியனை
அலகில் கொத்தி கொண்டு பறக்கிறது,
பெரும் பசி கொண்டதொரு
மீன்கொத்தி.

நீரில் நகரும் மேகத்தின் இடுக்குகளில்
ஓயாது சலம்பிக் கொண்டேயிருக்கிறது,
மின்னலை பூசிக்கொண்ட
மதம் பிடித்த மீன் ஓன்று.

அட்டை இல்லா புத்தகமென
திறந்து கிடக்கும் இக் குளக்கரையில்
புல்லாங்குழலேன இசைக்க துவங்குகிறேன்
ஒரு சிகரெட்டை.

சட்டென நீரிலிருந்து
யாழதிர படி ஏறிப்போகும் கவிதையொன்றின்
செழிப்பான தேகத்திலிருந்து
சொட்டிக் கொண்டே இருக்கின்றன
இச் சொற்கள் யாவும்.

.

Monday, May 3, 2010

இலந்தை பூக்கள்...

தோழி கயல் விழி சண்முகம் அவர்கள் "பதின் வயது நினைவுகள்" என்னும் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். அடர்த்தியான வேலை பளு, அதன் தொடர்ச்சியாய் அடிவயிற்றில் நிகழ்ந்த ஒரு அறுவை சிகிச்சை. இப்பொழுதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறேன். ஆதலால் தாமதத்திற்கு தோழி மன்னிக்க...

பதின்ம வயது என்றதுமே எனக்குள் வந்து போவது....

- "நாண் அறுந்த ஒரு யாழ்" -

இப்பொழுதும் கூட அதனை இழுத்துக் கட்டி இசைக்கலாம்தான், என்றாலும் என்னிடத்தில் தற்போது விரல்கள் இல்லை. பெரும்பான்மையான கவிஞர்களின் பேனா மூடியை ஏதோ ஒரு தேவதைதான் திறந்து வைத்திருப்பாள். அப்படியே ஒருவள் என் ரோமின் தெருக்களிலும் பாடித் திரிந்தாள்.

இடம் : மாரகுடி வரப்பு
வருடம் : மங்கலாக இருக்கிறது...


நான் வேட்டைக்கு போன இலந்தை மரத்தின் அடியில் அந்த சிறுமி நின்று கொண்டிருந்தாள். வெகு திருத்தமான முகத்தில் நெடு நேர தேடலின் களைப்பும், எதுவும் கிடைக்காத வெறுமையும் பரவிக் கிடந்தது. நான் அவளை சற்று தள்ளியிருந்த மரத்தின் தணிந்த கிளைகளை லாவகமாய் பற்றி பலமாக உலுக்க துவங்கினேன். சட சடவென பழங்களும், காய்களுமாய் விழும் இசையை கேட்டு ஓடி வந்தவள் நான் முறைத்து பார்க்கவும் அப்படியே உறைந்து போய் நின்றாள். நான் மேலும் சில கிளைகளை உலுக்கி தயாராய் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை கர்ப்பவதியாக்க துவங்கினேன். என் எதிரே வந்து நின்றவள் மெல்ல மெல்ல சொற்களை அவிழ்த்தாள். இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா?.... குரலில் ஒரு மழலை இருந்தது. அவளின் கேள்விக்கு அர்த்தம் புரிந்தவனாக ஐந்தாறு பழங்களை அள்ளி அவள் கையில் கொடுத்த படி நீ எந்த ஸ்கூல் என்றேன். நீங்க படிக்கிற அதே ஸ்கூல்தான் என்று சொல்லவும் நான் ஆச்சர்யமாகி என்னை இதுக்கு முன்பே உனக்கு தெரியுமா என்றேன் . சட்டென உற்சாகமானவள், ம்...சாயங்காலம் பிரேயர்ல நீங்கதான டெய்லி குறள் படிப்பீங்க என்றாள். தான் அதே ஸ்கூலில் ஐந்தாவது படிப்பதாகவும் பெயர் தேவிகா என்றும் சொன்னவள் இரை தேட சென்ற பறவை போல மீண்டும் தன் கேள்விக்கே திரும்பினாள். நீங்க இதை ஸ்கூல்ல காசுக்கு விப்பீங்களா???? இல்ல, இதை என் தம்பி தங்கச்சிக்கு எடுத்திட்டு போறேன் என்றேன். மிகவும் தயக்கத்தோடு எனக்கும் இரண்டு தங்கச்சி இருக்கு, அதுங்களுக்கும் அஞ்சஞ்சி பலம் தருவீங்களா???? என்றாள். அவள் இழுவையில் இருந்த அந்த இசை குறிப்பு இன்றும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் சரி, வாங்கிக்க என்றதும் சட்டென நீலப் பாவாடையை பாத்திரமாக ஏந்தினாள். நான் பையில் இருந்த பழங்களில் கணிசமான ஒரு பகுதியை சரிக்க இதை சற்றும் எதிர் பாராதவள் விழிகள் விரிய நாளைக்கும் நீங்க இங்க வருவீங்களா என்றாள். நான் "ம்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே சிறகு தரித்த மான் குட்டியாக அவள் வீட்டை நோக்கி ஓடத் துவங்கி இருந்தாள். அதுவரை காய்களும், பழங்களும் மட்டுமே இருந்த இலந்தை மரத்தில் அன்றுதான் நண்பர்களே நான் பூக்களை கண்டேன்.

மறுநாள் அதற்கு பக்கத்திலிருந்த தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் சனல் சாக்கை விரித்து, வைக்கல் பிரியை தலைக்கு கொடுத்தபடி பள்ளி கொண்ட ரெங்கநாதனாக ராணி காமிக்ஸ்குள் மூழ்கி போயிருந்தேன். சட்டென தலை பக்கமாய் மூச்சிரைக்க ஓடி வந்து அமர்ந்தவள் எனக்கெதிரே மூடிய கைகளை நீட்டி, பின்பு மெதுவாக விரித்தாள். "சில நெல்லி கனிகள்". இங்கு..இங்கு... இங்குதான்.... நண்பர்களே நிச்சயமாய் நான் இடறி போயிருக்க வேண்டும். இல்லையென்றால் மறுநாளே அவளுக்காக வெடி காய்களை தேடி கொண்டு வந்திருக்க மாட்டேன். வெடி காய் என்பது கிராமத்து மாணவர்களிடம் வெகு இணக்கம். நெல் மணியை போலவே ஒரு மடங்கு பெரிதாக இருக்கும். அதை எச்சிலால் ஈரப்படுத்தி யாருடைய சட்டை காலர் இடைவெளியிலாவது தெரியாமல் வைத்து விட்டால் போதும். ஐந்து வினாடிகளுக்குள் அது பட் என்ற சிறு சத்தத்தோடு வெடிக்கும். அப்போது அவர்கள் என்ன நடந்தது என்று புரியாமல் பின்னாங்கால் கொண்டு கழுத்து சொரியும் மிருகம் போல கைகளால் கழுத்தை மாறி மாறி தட்டி கொண்டிருப்பது பார்க்கவே வேடிக்கையாக இருக்கும்.

அய்! வெடி கா என்று சந்தோசத்துடன் வாங்கி கொண்டவள், அவள் பள்ளியில் நடந்த சில வெடி காய் நகைச்சுவை அனுபவங்களை வெகு சுவாரஸ்யமாய் சொல்லி அதற்க்கு அவளே சிரித்து கொண்டும் இருந்தாள். அப்போது ஏதோ ஒரு காகம் என் தலைக்கு மேல் அசிங்கம் செய்து விட்டது போல் “ச்சட்” என்று ஏதோ ஓன்று என் தலையில் விழுந்து தெரிக்கவும் நான் என்னையும் அறியாமல் பின்னங்கால் கொண்டு தலை சொரியும் மிருகமாகி போயிருந்தேன். நடந்தது என்னவென்று எனக்கு புரிந்த பொழுது வரம் கொடுத்த சிவன் தலையிலேயே வெடிகாய் வைத்த பெரிமிதத்தோடு தூரத்தில் இவள் நுரைக்க நுரைக்க சிரித்த படி ஓடிக் கொண்டிருந்தாள்.

வருடம்: 1993
இடம் : குரு டுடோரியல் சென்டர்,நன்னிலம்


அன்று ஆறாம் வகுப்புக்கு டியுசன் எடுக்கும் மிஸ் ஏனோ வராத காரணத்தினால் அருகில் இருந்த என் வகுப்பு மாணவர்களோடு சேர்ந்து அமருமாறு பணிக்கப் பட்டிருந்தனர். முதலில் ஓடி வந்த தேவிகா என் அருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள். பாடம் எடுக்கும் உத்தேசம் இல்லாத அருணா மிஸ் அரையாண்டு தேர்வு விடை தாளை கொடுக்க துவங்கிய கணம், கமலேஷ் எந்திரிச்சு இங்க வா என்றார். நான் அவர்கள் கையிலிருந்த பிரம்பின் பயத்தைவிட இவளுக்கு முன்பு அடி வாங்க வேண்டுமே என்ற வலி மேலோங்க எழுந்து சென்றேன். விடை தாளை என் கையில் கொடுத்தவர்... நீ எழுதி இருக்கிற கடுரையை எல்லோருக்கும் கேட்குற மாதிரி நல்ல சத்தமா படி என்றார். நான் படித்து முடித்த வேளை கட்டூரைன்னா இப்படிதான் உணர்ச்சி பூர்வமா எழுதணும். ஆறு தன் வரலாறு கூறுதல்னா ஆறே எழுந்திருச்சி வந்து இப்படிதான் பேசுற மாதிரி இருக்கணும். இவன் பேப்பர வாங்கி எல்லோரும் இன்னொரு தடவை படிச்சு பாருங்க என்று கூறிக் கொண்டே என் தோளில் கை வைத்தவர் முழு ஆண்டு பரீட்சைக்கு இந்த கட்டுரை மட்டும் வந்துச்சி இதை படிக்கிற வாத்தியார் இதுக்காகவே உன்னை பாஸ் போட்ருவாரு, போய் உட்காரு என்றார். பெருமை பிடி பட தேவி இன்னும் நெருங்கி அமர்ந்து கொண்டாள். அன்றிலிருந்து அருணா மிஸ்சும், தமிழ் பாடமும் மிகவும் பிடித்துப் போய் இருந்தார்கள்....

வருடம் : 1997
இடம் : என் வீடு, நன்னிலம்


பத்தாம் வகுப்பு தேர்ச்சியுற்ற நான் தொழிற்கல்வி பயில சென்னைக்கு இடம் பெயர்ந்தேன். அந்த நெருக்கமான நகரத்தின் தார் சாலையில் என் களத்து மேடும், என் கிராமத்து சிநேகிதியும் தொலைந்து போய் இருந்தார்கள். கிட்ட தட்ட பத்து மாதங்கள் கழித்து நரகாசுரன் இறந்ததை கொண்டாட ஊருக்கு வந்திருந்தேன். என்னை பார்க்க வந்தவளிடம் ஏக போக வித்தியாசம். புதிதாக தாவணி அணிந்திருந்தாள்.கண்களில் வசீகரம் கூடி இருந்தது. அப்போது வந்த அப்பா, இந்த பத்து மாசத்துல நீ எப்ப வருவ எப்ப வருவன்னு இந்த புள்ள ஒரு நூறு தடவையாவது கேட்டிருக்கும்டா என்றார். ஓயாது சிறகடித்து கொண்டே இருக்கும் வண்ணத்து பூச்சி போல எதையாவது பேசிக்கொண்டே இருப்பவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே நின்று கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத நேரம் திடிரென ஒரு காகிதத்தை என் கையில் தினித்து விட்டு ஓடிப் போனாள். பிரித்தேன் . "மாலை பிடாரியம்மன் கோவிலுக்கு வரவும்". அந்த நாட்களுக்கு பிறகு என் ஹார்மோன்கள் என்னை முட்டாளாக்க துவங்கின. இல்லாத என் மீசையை சவரம் செய்ய துவங்கினேன். எப்படி திருப்பினாலும் என் திசைமானி அவளின் திசையையே காட்ட துவங்கியது.

வருடம் : 2002
இடம் : மயூரநாதர் ஆலயம், மயிலாடுதுறை.


மதிய நேரம் என்பதால் ஒரு கண்ணை இறுக்க மூடி கொண்டு ஒரு கண்ணால் மட்டும் வெளி உலகை பார்த்துக் கொண்டிருந்தது கோவில் வாசல். பிரகாரத்தில் அமர்ந்திருந்த நாங்கள் முக்கியமான தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தோம். திருமணதிற்கு பிறகு பிறக்க போகும் முதல் பெண் குழந்தைக்கு என் விருப்படி பெயர், "ஜனனி". மகனுக்கு அவள் விருப்பப்படி இன்னும் தேடி கொண்டிருக்கிறாள். சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாக என் சிறு வயது போட்டோவை எடுத்து என்னிடம் நீட்டியவள் இந்த போட்டோவுக்கு பின்னாடி கவிதை ஒன்னு எழுதிகொடுங்க என்றாள். எனக்கு அப்போது மிகவும் பிடித்து போயிருந்த...

அணு அணுவாய்
சாக முடிவெடுத்த பின்
காதல்
சரியான வழிதான் ....

என்னும் அறிவு மதியின் கவிதையை சொல்லி அதையே எழுதுவதாக சொன்னேன். வேண்டாம், வேண்டாம்.. உங்களோட கவிதையை.. உங்க கையாள.. எழுதுங்க. அழுத்தி,நிறுத்தி சொன்னாள். நான் சிரித்துக் கொண்டே நாளைக்கு வரும்போது வைரமுத்தோட "இந்த பூக்கள் விற்பனைக்கு அல்ல" அப்படிங்கிற புத்தகம் கொண்டு வந்து தர்றேன். அதை முதல்ல நீ படி அப்புறமா என்னுடையதை கவிதையின்னே சொல்ல மாட்ட என்றேன். உங்களால இப்ப எழுத முடியுமா?. முடியாதா?...இப்போது அவளின் வரிகள் கொஞ்சம் சூடாக இருந்தது.இது எங்களுடைய எல்லா சந்திப்புகளிலும் நிகழும் ஒரு ஊடல்தான். இவள் குடும்ப மலரில் வரும் கவிதைகளை மட்டுமே படிக்கும் குடத்து தவளை என்பதால் என் கிறுக்கல்களை பிடித்து போய் இருந்ததில் ஆச்சர்யம் இல்லை. என் கவிதைகளை இவள் ரசித்து பேசும் வேளைகளில் நான் என்னை சிறுமை படுத்தி கொள்வதில் ஒரு சந்தோசம் இருந்தது. நான் ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுத குனிந்த வேலையில், கவிதைக்குள்ள நீங்களும் நானும் இருக்கிற மாதிரி பார்த்துக்குங்க என்றாள்.
சரி, அப்ப இன்னொரு நாள் யோசிச்சு எழுதுறேன்....இல்ல, இல்ல.. இப்ப.. இந்த நிமிசம் உங்க மனசுல என்ன தோணுதோ அதை எழுதுங்க. சில நாட்களாகவே மனதில் உருண்டு கொண்டிருந்த வரிகளை கண்களை மூடி ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொண்டு எழுத துவங்கினேன்.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
கவிதைகளாக
மலர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


வாங்கி படித்தவளின் முகத்தில் பெரும் அதிருப்தி.நான் உங்களை என்ன எழுத சொன்னேன்.நீங்க என்ன எழுதி வட்சிருகீங்க உங்களையும் என்னையும் சேர்த்து எழுத சொன்னா... நீ என்ன சொன்னியோ அதைதான் எழுதி இருக்கேன் நல்லா படிச்சு பாரு.
என் மீது நிலைத்திருந்த அவளின் பார்வை ஒரு டால்ஃபின் போல எகிறி வரிகளுக்குள் குதித்து நீந்தியது. நிமிர்ந்தவள், இல்ல ஒன்னும், உங்களோடது கானல் வரி; நான் படிக்கும் போது கவிதையாகுதுன்னு எழுதி இருக்கீங்க என்று சிணுங்க துவங்கினாள். அவளின் கண்களையே சில நொடிகள் உற்று பார்த்து விட்டு பின்பு மெதுவாய் சொன்னேன்.கவிதையில உள்ள ஒவ்வொரு வரியிலையும் முதல் எழுத்தை மட்டும் மேலிருந்து கீழா படி. மீண்டும் டால்பின் குதித்தது.

தேவதை உன்
விழிகளில் – என்
கானல் வரிகளும்
விதைகளாக
லர்ந்து
லேசாக இங்கு
ஷ்சப்திகின்றன.


விளங்கி கொண்டவளின் உலகத்திற்கு அது போதுமானதாய் இருந்திருக்க வேண்டும்., விழிகள் முழுவதும் காதல் பொங்க வரிகளை அழுத்தி முத்தமிட்டாள். அவளின் உதடு பட்டு உயிர் கொண்ட எழுத்துக்கள் வண்ணத்து பூச்சியாகி பறந்தது.


Wednesday, February 17, 2010

நிறையழிதல்...

விழுதுகளிறக்கிய
ஆலமரத்தின் கதகதப்பில்
கூடியிருந்த கூட்டுப் புழுவொன்று
வண்ணத்துப் பூச்சியாகி
வனமேகியது
அதன்
பிரிவின் ஆற்றாமையில்
இடறிய ஆலமரம்
மீண்டும்
விதைக்குள் விழுந்தது.

.

Wednesday, February 10, 2010

சிலரின் இலக்கிய சேவைகள்...


ஆடைகளை
அவிழ்த்து போட்ட அவர்கள்
மானத்தை பற்றி
விவாதிக்க துவங்கினர்.

அவன் படைப்புக்களை
இவன் விமர்சனத்தில்
குழி தோண்டி புதைத்தான்

இவன் விமர்சனத்தை
அவன் கவிதைகளால்
எரியுட்டினான்.

சிதறி கிடந்த பூக்கள் கண்டு
நந்தவனமென்று தவறுதலாய்
நுழைந்து விட்ட
இலக்கியம்
வாசகனை அழைத்துக்கொண்டு
சுடுகாட்டிலிருந்து வெளியேறியது.

--------------------------------------------------------------------------

முற்றும்.

மயானத்தில்
பட்டாம்பூச்சி பிடிக்கும்
மகளுக்காக உதிர்கிறது
எரியும் சிதையிலிருந்து
அவன் கடைசி புன்னகை.

.

Wednesday, January 20, 2010

விழுந்தவனுக்கு ஒரு கடிதம்...

எழுந்திரு தோழா,
தோல்வியொன்றும் சமுத்திரமன்று
துவண்டு போக,
நீ எழுந்து நின்றால்
அது சிறிய சாலவம்

கரங்களில் அள்ளிய வாழ்க்கை
விரல்களின் இடுக்கு வழி
ஒழுகியதென்றா கவலையுற்றாய்

நழுவிய துளிகள் மீண்டும்
உன் காலடியிலேயே விழுகுமப்பா
எழுந்திரு...

மனிதனின் பரிணாமம்
விலங்கை தோலுரித்து
உன்னை வெளிக்கொணர்ந்தது
நீ உன்னை உரித்து
என்னவென்று உணரலாம்
எழுந்திரு

நான்
இமயமாய் உயர வேண்டுமென
இறைவனிடம்
வரம் கேட்கிறாய்,

புத்தியை பூட்டி
சாவியை தொலைத்தவனே !!

இறைவன் வீணைதான் தருவான்
இசையை நீதான் மீட்டிக்கொள்ள வேண்டும்

நடக்கும் வரைதான் நதி
தன் நடையை நிறுத்திக்கொண்டால்
அது குட்டை

இங்கு விழுவதல்ல அவமானம்
விழுந்தவன் அசைவற்று போனால்
அதுதான் அவமானம்
விழுந்த உன் விரல் அசைந்தாலும் போதும்
நீ புதிதாய் பிறந்து விடுகிறாய்
எழுந்திரு

வாழ்கையை வென்றவனெல்லாம்
அதிகாலை எழுந்தவனாம்
குறித்துக் கொள் உன் படுக்கையில்

கனவுகளோடு கண்களை மூடு
குறிக்கோளோடு கண்களை திற

உன் முன் இருப்பது விளக்கா
நீ தீபம் !
முட்களின் புதரா ?
நீ தீ !!

தாகமாய் இருந்த முயற்சிகளை
சுவாசமாய் மாற்று

இதுவரை நீ கடந்து வந்தது
கள்ளிக்காடு
இனி தாண்டப் போவதோ
நெருப்பு பள்ளங்கள்

ஆனால்
சினங்கள் களைந்து
புன்னகை எனும்
சிறகுகள் தரித்துக் கொள்

தோல்விகள் உன்னை சூழ்வினும்
காற்றில் கரையும் கற்பூரம் போல
திரவமின்றி வாயுவாக
பதங்கமாகிப் பழகு

இன்று உன்னில் விழுந்த தோல்விகள்
மண்ணில் புதையுண்ட நிலக்கரி ,
காலங்களின் வயது நரைக்கும் போது
அது வைரமாகிப் போகும்.

- ( ஒரு தோல்வியின் அடிவாரத்தில் அமர்ந்து
எனக்கு நானே எழுதிக்கொண்டு
எழுந்து வந்த வரிகள் இது.
2004 பழைய டைரி குறிப்பிலிருந்து ) -


Thursday, January 14, 2010

முதிர் கன்னியின் பிறழும் இரவு...

என்னுடைய எல்லா இரவுகளிலும்
வந்து அமர்ந்து கொள்கிறது
உருவமில்லா ஒரு யாளி

அதன் பசிக்கு
என் உறக்கம் தின்று
தாகத்திற்கு
என் கண்ணீர் குடிக்கிறது

ஒற்றையில் எறியும்
இந்த மெழுகுவர்த்தி
செல்வியாக புலரும்
என் இரவுகள் குறித்து
அழுது தீர்க்கிறது

முயங்கி கிடக்கும்
இரு சுவர்கோழி கண்டு
துளிர்க்கும் ஹார்மோனில்
தேனீக்களின் கொடுக்குகள்

கர்ப்பம் திணிக்கப்பட்ட வயிறு
என் தலையணைக்கு மட்டும்தான்
வாய்க்கும் போல

பழுப்பேறிய
என் வயதின் வலியில் பூத்த நெருப்பில்
கருகும் கண்ணகியின் கால்சிலம்பு
மாதவியின் குங்குமத்தின் மீது படிகிறது

புழக்கமற்று கிடக்கும் ஒரு
புல்லாங்குழலின் வலியை
விலை பேசும் நீங்கள் அறிய
வாய்ப்பில்லை

நேற்று
சாமத்தில் குறி சொன்ன கோடாங்கிக்கு
காலையில் நான் கொடுத்த
முளை கட்டிய பயிறு
ஏதேனும் குறிப்பை
உணர்த்தியிருக்க கூடும்

இன்றிரவு
நான் கதவை.
தாழிடப் போவதில்லை.

.

Monday, January 4, 2010

நீரியல் சுழற்சி...


தேங்கி கிடக்கும்
நீர் நிலை நான்
என்மீது கவிழ்ந்து படுக்கும்
சூரியனின் கதிர்வீச்சு நீ -
தொடங்கியது ஆவியாதல்.

என் இதழோடு இதழ் கவ்வி
நீ உறுஞ்சிய தேவகனத்தில்
தன்னிலை மறந்த நான்
தொலைந்து போகிறேன்
காற்றின் பெருவெளியில்.

உன் முத்தத்தில் முக்தி பெற்று
வெட்கத்தில் விலகி ஓடி நிற்கிறேன்
தூர வானத்து கார்முகிலாய்.

உன் சிதோஷன சிறு விரல்கள்
செல்லமாய் தலை வருட
தடுமாறிய என் உயிரின் பிடியிலிருந்து
நழுவி விழுகிறது மழை துளி.

நீ பிரிந்து போகும் இரவுகளை
நினைத்துக் கொண்டவள்
உன் மார்பில் முகம் புதைத்து
ஒரு பெருமழையென
குலுங்கி அழுகிறேன்.

உடைந்து சிதறும்
என் கண்ணீரின்
ஈரம் துடைக்க
ஓடி வருகிறது
உன் வெயிலின் விரல்கள் .

.

Sunday, December 27, 2009

அவளின் காதல் கதை...

தட்டிலிருந்து தவறி விழும்
இறைச்சிக்காக
சுற்றிவரும் நாயின் நாக்கில்
டிராகனின் உக்கிரம் -
அவன் காதல்.

வேதாளத்தின் விடுகதைக்கு
விடை சொல்லபோய்
பந்தயத்தில் தோற்கிறாள் -
பாடலிபுரத்து பேசா மடந்தை

காதலின் தாழ்வாரத்தில்
ஒதுங்கிய வெண்புறாவை
வன்புனர்கிறது -
மலைபாம்பு

குறவனின் கையிலிருக்கும்
தேன்கூட்டின் மிச்ச சக்கை;
தாகம் தீர்ந்ததென
தூர்க்கப் பட்ட ஓர் கிணறு

விண்ணை நோக்கி எறியப்பட்ட
ஒரு கல்
மீண்டும் மண்ணில் விழுந்து
சலனமற்று போனது...
திசைகளை களவு கொடுத்த
கட்டுமரம்
அலைகழிகிறது
காற்றின் போக்கில்...

அணையும் தருவாயிலிருக்கும்
மாட விளக்கொன்றிர்க்கு
நல்லெண்ணெய் இட்டு
திரியை தூண்டுகிறாள்
சிறுமியொருத்தி...

போதிமரத்தின்
அடியில் மேயும்
பெட்டை மயிலின்
கையிலிருக்கிறது
உலகை அழிக்கும்
சாபம்

எச்சரிக்கை -
வெள்ளிகிழமை நடுநிசியில்
வேட்டைக்கு போகும்
ஒத்த பிடாரியை வழிமறித்தால்
நீங்கள் இரத்தம் கக்கி
செத்து போவீர்கள்

.

Wednesday, December 23, 2009

அரூபமானவன்...

விழாவில் நுழைந்த எனக்கு
ஆச்சர்யமாய் இருந்தது..

அவர்கள் கண்களுக்கு
நான் புலப்படவே இல்லை
அக் கூட்டத்தில்
ஒரு கழுத்தைக் கூட
திருப்பவில்லை எனது குரல்.
சில மனிதர்கள்
என் உடலை ஊடுருவி
கடந்து போகிறார்கள்.
நிறைந்து வழியும்
அரவத்தின் மத்தியிலும்
என்னை சுற்றி மிதக்கிறது
ஒரு தனிமையின் ஏகாந்தம்.
அவர்கள் கண்களிலிருந்து நான்
மொத்தமாய் மறைந்து போயிருந்தேன்
நான் ஆவியாகி
போனேனோயென பயந்து
கண்ணாடி பார்க்கையில்
என் பிம்பத்தின் மீது
எழுதப்பட்டிருந்தது
தனக்கென்று
அடையாளமில்லாதவன்
அரூபமானவனென்று' ...
.

இலக்கண கனவு...

ஒரு மொட்டை மாடி உறக்கத்தில்
பொத்தல் வழி உள்ளிறங்கிய கனவு
கட்டி தர தீர்மானித்தது
எனக்கொரு கவிதை...

சகல தளவாடங்களையும்
சேகரித்த கனவு
திருப்பாவையின் இறை வாழ்தொன்றை
கசிந்துருகி பாடி
தொடங்கியது கட்டுமானத்தை...

காற்றில் தளும்பும் சொற்கள்
காகிதத்தில் வழியும் வரை
பொறுமை இல்லை...

முட்டி தள்ளுகிறது
மொத்த கலனையும்...

சரிந்தோடுகிறது
இலக்கணங்கள் யாவும்...
எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென
சிதறி போயின ஐந்தா பக்கமும்...

"கடகடவென" ஓடி ஓர்
இரட்டை கிழவியை கையில் எடுத்த கனவு
அதை லாவகமாய் பொருத்துகிறது
வரிகளுக்கிடையில்...

இன்னிசையளபெடையிலிருந்து
சில ஓசைகளை எடுத்து
கவிதையின் சுவர்களை எழுப்புகிறது...

நிலை மொழியின் ஈற்றெழுத்தும்
வரு மொழியின் முதலெழுத்தும்
இணையும் பொழுதெல்லாம்
வெட்கத்தில் கண்கள் பொத்திக் கொள்கிறது..

விசாரித்து பார்த்ததில்
பொருளிலக்கனப்படி அவை
சொற்களின் புனர்ச்சியாம்...

தனக்கு இலக்கணத்தோடு கொஞ்சம்
இங்கீதமும் தெரியுமென்று சொல்லி
சிரிக்கிறது...

அணியின் அடியில் சிக்கி கிடந்த சில
சிலேடைகளை கண்டு துணுக்குற்று
அதையே கவிதையின் கூரையாக வேய்ந்து
சொல்லுருபுகளால் இறுக்கி கட்டுகிறது...

உயரம் எட்டாத இடங்களில்
அடுக்கு தொடரை இழுத்து போட்டு
ஏறுகிறது...

வல்லினம் மிகும் இடங்களை
செல்லமாய் தலையில் குட்டுகிறது,
ஈறுகெட்ட எதிர்மறை சொற்களை
தொடையில் கிள்ளுகிறது...

ஐகார குறுக்கத்தில் ஜன்னல்
ஈற்றடியில் கதவு
மரபுத் தொடரில் படிகள் என
எல்லாம் முடிந்த களிப்பில்
தன் நெற்றியில் துளிர்த்த சில
முற்றுப்புள்ளிகளை விரல்களால்
வழித்த கனவு - அதை சுண்டுகிறது
என் உறக்கத்தின் மேல் ...

சட்டென முகத்தில் விழுந்த
துளிகளின் குளிர்ச்சியால்
திடுக்கிட்டு விழிக்கையில்...

பொட்டல் வானத்தில்
நட்சத்திரங்களாகி போயிருந்தன
சொற்கள் யாவும்...

கவிதையாக
தூரத் தொடங்கியிருந்தது
மழை..

- கமலேஷ்.கி -

.

Saturday, December 19, 2009

காதலின் பக்கங்கள்...


இதுவரை காதலை பற்றி எத்தனையோ கவிஞர்கள் எழுதி தீர்ந்த போதிலும் இன்னும் பல கோடி பக்கங்கள் வெறுமையாய்...அத்தகைய காகிதங்களின் வெற்று உடல்களுக்கு என்னிடமிருந்தும் சில கவிதா சட்டைகள்...

காதலின் உலகத்தை சில வரிகளுக்குள் அடக்கிவிட முடியாதுதான் என்றாலும் தலைக்கு மேல் இருக்கும் சில சொற்களை எக்கி பறிக்க முயலும் ஒரு குழந்தையின் முயற்சிதான் இது...

இவ்வுலகில் மார்தட்டி நின்றவையனைத்தும் தன் பொலிவை இழந்து இன்று அழுகிறது... அதில் காதல் மட்டும்தான் இன்னும் காதலாகவே நின்று சிரிக்கிறது..
வளர்ந்து வரும் நாகரீகத்தில் சருகாய் போன மானுடத்திலும் இன்னும் காதலின் பக்கங்கள் மட்டுமே ஈரம் தாங்கி நிற்கின்றன..

இதுவரை காதல் விண்டு செரிக்காத துறைகள் எதுவுமே இல்லை..
அம்பிகாபதி அமராவதி காவியங்களில் துவங்கி
காரல்மார்க்சின் தத்துவங்கள் வரை
கலை,விஞ்ஞானம்,ஆன்மிகம், வரலாறுயென
அத்தனையும் தின்று தீர்த்து விட்டன...

- இனி மிஞ்சியிருப்பது காதல் மட்டும்தான் -

மிரட்டும் கடலையும் தன் கால்களால் இறைத்து
தூர்த்து விட முனையும் வீரம் காதலில் மட்டுமே சாத்தியம்...

எங்கள் புலவனின் தெருக்களில் காதலின் பிரச்சாரங்களே சற்று வேறுதான்...

எழுந்து வா புத்தா
இவளை பார்
இப்போது ஆசை துற... - என சித்தார்தனையே சவாலுக்கு அழைக்கிறான்
காதலில் மோட்சம் பெற்ற ஒரு கவிஞன்..

உம் என்று சொல் காதலி
உனக்காய் கம்பனை கூட்டி வந்து கவி பாடுகிறேன் - என
வரலாற்றை திருப்பி இறந்தவனை எழுப்புகிறான் ஒரு காதலன்..

- அவளின்றி ஓர் அணுவும் அசையாது - என
விஞ்ஞானத்தையே வியக்க வைக்கிறான் மற்றொருவன் ...

காதல் - ஒரு கடல்
இங்கு கால்கள் கூட நனைக்க முடியாத ஒருவன்
கரையில் அழுது புரள்கிறான்..
அதில் முன்னேறிய ஒருவன் ஆனந்த குளியல் போடுகிறான்...
ஒருபுறம் அக்கடலையும் கடைந்து
அமுதம் கண்டவன் கையில் கொண்டு ஓடுகிறான்...
மறுபுறம் ஒருவன் கண்ட நஞ்சை தானே உண்டு சாகிறான்...

காதல் ஏறியவனுக்கு எவரெஸ்ட் என்றால்
இடறியவனுக்கு மிசெளரியின் பள்ளத்தாக்கு...

வசந்த வனத்தின் வாசலென்றால்
மயானத்தின் மையம்,
முன்னேற்றத்தின் முதல் படி,
மரணத்தின் கடைசி எச்சரிக்கை...

காதல் இறந்தும் வாழும்
முதல் சரித்திரம்...

இங்கு உண்பதை விட
உண்ணப்படுதல் சுகம்...

இங்கு விளக்கும் நாங்களே
விட்டில் பூச்சுகளும் நாங்களே..

எங்களில் தீபமும் உண்டு..
தீப்பந்தமும் உண்டு..

மீனுக்கிட்ட தூண்டிலில்
மீனவனே சிக்கும் விந்தையும் உண்டு...

விளங்க சொன்னால்
இங்கு
நாங்களே தச்சன்...
நாங்களே சவப்பெட்டி...
நாங்களே சடலம்...

இன்னும் வரம்புக்குட்படாத
எத்தனையோ வரையறைகள்...

- காதல் தொடரும் -

- கமலேஷ்.கி -

Tuesday, December 15, 2009

எனது டீன் ஏஜ் கவிதைகள்...

என் இருபதுகளில் எழுதப்பட்ட கவிதைகள் இவை... சிறுபிள்ளைதனம் கொஞ்சம்.... இல்லை, நிறையவே இருந்தாலும் தூக்கியெறிய மனமில்லை...


உன் விழிகளை வெல்லும் கவிதையை
எழுத முடியாமல்
தோற்றுக்கொண்டே இருக்கிறது
என் தூரிகை...


பிரகாரம் சுற்றும் சிறுமியொருத்தி
உனக்கும் அம்மனுக்கும்
வித்தியாசம் தெரியாமல்
சட்டென
உன்னை கையெடுத்து கும்பிடுவதைப் பார்த்து
கைகொட்டி சிரிக்கிறது
என் காதல்....

நான் அழுவதை
நீ பார்த்துவிடக்கூடாது
என்றுதான் நினைக்கிறேன் -
ஆனால் என்ன செய்ய ???
நீ என் கண்களாக அல்லவா இருக்கிறாய்...

நீ வந்த போது உணராத
என் சூரிய உதயத்தை
நீ சென்ற பிறகு உணர்த்தியது
என் அஸ்தமனம்...


அசைவின்றி இருக்கிறது
உன் இதழ்கள்
ஆனால்
உன்தன் மௌனம் மட்டும்
எதையோ சப்தமாய் பேசுகிறது
என்னோடு...


உன்மேல் உள்ள காதலின்
உச்சத்தை சொல்ல முடியாமல்
வார்த்தைகளோடு
போரிட்டுக் கொண்டிருக்கிறேன் நான்.
ஆனால் எந்த சிரத்தையுமின்றி
சொல்லிவிடுகிறாய் நீ -
உன்தன் ஆழமான
ஒற்றை பார்வையால்...

இன்று பூத்து குலுங்கும்
என் இதயம்
நீ முத்தமிடுவதற்கு முன்
மொட்டுகளாய் இருந்ததாய் ஞாபகம்.....


Saturday, December 12, 2009

ஒரு பிரிவின் கடைசி கணங்கள்...

.

நீ வழியனுப்பு என்று சொன்ன
அந்த ஒற்றை வரியின் கணுவில்
சிக்கி கிழிகிறதென் மனது....

இன்னும்.... இன்னும்.....
ஒரு நொடிதான்
உடைந்து விடும்
கண்ணீரோடு சேர்ந்து
உயிரின் ஒரு துளியும்...

உச்சரித்துவிட்டு உலர்ந்து விட்ட
உன் உதடுகளின் அடிவாரத்தில் அமர்ந்து
சப்தமாய் அழுகிறது என் காதல்...

தவிப்பின் விளிம்பில் தள்ளாடும்
உன் பலகீன புன்னகையின்
அர்த்தம் புரிந்த உடன்
உயிரின் வேரறுக்க தொடங்கிவிடும்
வழியென்னும் கொடுவாள்...

கடைசியாய் நீ என் கரம்பிடித்து
வரட்டுமா என்ற அழுத்ததிற்குள்தான்
உன் நினைவுகளை கட்டியணைத்த படியே
செத்து கிடக்கிறது என் உலகம்...

உன் பிரிவினை சொல்ல
உனக்கு வார்த்தை கிடைத்துவிட்டது...
ஆனால் என்தன் வலியினை சொல்ல வரிகளின்றி
இன்னும் தேடியலைகிறது இக்கவிதை....
.

Tuesday, December 8, 2009


மெய்பொருள் காண்பதறிவு......

கொடிமரத்தை பற்றியதொரு
கவிதை எழுதியிருந்தேன்.
கவிதையில்
வந்தமர்ந்த ஓர் பறவை
வெகுநேரம் எதையோ தேடிவிட்டு
பறக்கும் போது சொன்னது,
உன் மரத்தில்
பழங்களே இல்லை....

(எனக்கு பிடித்தமான கவிஞர் ஒருவரின் எழுத்துக்கள், சில தினங்களுக்கு முன் காயம்பட்ட பொழுது அவரின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கவிதை இது... வரிகளுக்கு சொந்தக்காரன் நான் எனிலும் படுபொருள் அவருக்கே உரித்தானது...)

-------------------------------------------------------------------------------

குரல்

பிடிப்பு தளர்ந்த
பேருந்தின் இருக்கை
வழி நெடுகிலும் பேசுகிறது
கிளியின் பாஷை..
பறவையின் மொழி
தெரியாதெனினும்
என் கவிதைக்கு
கிடைத்ததொரு குரல்...

----------------------------------------------------------------------------

கவிதையும் தருவாள்
....

வார்த்தைகள் மறுதலித்து
தூக்கம் தின்று கொண்டிருந்த
கவிதையிடம் கோபமாய் கேட்டேன்.

உனக்கு என்னதான் வேணும்.????

ஊனமில்லாத உண்மை,
அழுக்கில்லாத அன்பென்றது.

"அம்மா" என்று எழுதிக்கொடுத்தேன்

அருகில் படுத்து அமைதியாய்
உறங்கிப்போனது...

.

Friday, December 4, 2009

தாவர உண்ணி....


கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...

கழுத்தறுபடும் ஆட்டின் வலியை
உணர்வதேயில்லை
மிதிபடும் செடிகளில் எப்போதும்...

வேலங்குச்சியில் பல் துலக்க
பல நேரம் முறித்து விடுகிறோம்
மரத்தின் விரல்களை...

கொஞ்சம் உற்று பாருங்கள்....

உங்கள் கூந்தலை அலங்கரிப்பது
ஒரு தாவரத்தின் கண்களாய் இருக்கலாம்...

நீங்கள் பிடுங்கி நட்ட நாற்றில்
ஒரு புணர்ச்சி பிரிந்திருக்கலாம்..

இதோ
பசு மரத்தில் அடிக்கப்பட்ட ஆணி -
இன்னுமொரு இயேசு அறையப் பட்டிருக்கலாம்....

கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்..

விழாவுக்கென வெட்டப்பட்ட குலைவாழை
மடிந்திருக்கிறாள்
பூப்பெய்திய பெண் ஒருத்தி....

செரிக்கப்படும் விதைகளோடு
முடிந்து போகிறது
சில கோடி தலைமுறைகள்...

குழந்தை கிள்ளிய இலையின் காம்பில்
வழிகிறது ஒரு யாக்கையின் இரத்தம்...

நீங்கள் இறுக்கி கட்டிய கொடி கம்பி
நெருக்குகிறது ஒரு உயிரின் சுவாசம்...

உண்மையில் கொலைகள் வெகு சுலபம்தான்
வலியென்ற வாய் இல்லா விடில்...


- கமலேஷ்.கி -

குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).



Tuesday, December 1, 2009

ஈடில்லா இழப்பு...



காலை எழுந்ததும் நாளிதழ் புரட்டினேன்,
இன்று இழப்பு என்றதென் ராசிபலன்....

எதையும் இழப்பதில்லையென
சூள் கொண்டேன்...

போர்களங்களின் சாலைகள் விலக்கினேன்-
அமைதியை இழந்து விடக்கூடாதென.....

கோபங்களை புன்னகையில் புதைத்தேன்-
நிதானத்தை இழந்து விடக்கூடாதென.....

வார்த்தைகளின் கையில்
பூக்களை கொடுத்தேன்-
உறவுகளை இழந்து விடக்கூடாதென...

குருட்டு வாகனங்களின்
முரட்டு சாலைகள் தவிர்த்தேன்-
உயிரை இழந்து விடக்கூடாதென...

மலை முரசு ஒன்று செய்தி தாங்கி வந்தது -
..
" கொலம்பியா விண்கலம் நடுவானில் வெடித்து சிதறியது..
கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் "

ஜோதிடம் ப.லி..த்...தே வி.ட்..ட...து.....
.
.
.
என் பழைய டைரி குறிப்பிலிருந்து -
பிப்ரவரி,01, 2003
கமலேஷ்.கி

Thursday, November 26, 2009

ஒரு அட்சய பாத்திரம் பற்றி...

இவ்வுலகம் வியந்து பார்க்கும் விசயங்களில் இன்னுமொன்று
- வைரமுத்து -
அந்த ஆழ்கடலில் ஆர்பரிக்கும் கவிதைகளை ரசித்து, மயங்கி கிடக்கும் கரையில் நானும் ஓர் மண் துகள்.




தமிழன்னை பெற்றெடுத்து,
இலக்கியம் தத்தெடுத்த வைரவா
உன் வாழ்வில்
நீ அறியா சில ரகசியங்கள்
உன் ரசிகன் சொல்கிறேன் கேள்.

நிறை மாத கருவாய் நீ,
நிறை மாத கர்பிணியாய் உன் தாய்,
வயிற்றில் தீராத கூசலை
என்னவென்று சோதித்தாள் -
அவளின் கற்பபை சுவர்களெல்லாம்
நீ கவிதைகளை கிறுக்கி கொண்டிருந்தாய்.

புதையல் என்றால்
புவியுள்தான் என்றிருக்க
நீ மட்டும் கருவழி வந்தாய்.

இவ்வுலகில்
இரண்டு நிலாக்கள்
இரண்டு சூரியன் உண்டென்பேன்
நிரூபிக்க வேண்டுமெனில்
உன் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு
நீயே நின்று பார்.

இதுவரை
தீ மட்டும்தான் சுடும் என்றிருந்தேன்,
உன் கவிதைகள் காணும் வரை.

பனித்துளியின் தலையில்
மின்னல் நட்டு வைக்கிறாய்..
பூமி பந்திற்கு நிலவை பொட்டு வைக்கிறாய்
மேகம் குளிர வானம் போர்துகிறாய்.
கவிதை பாத்திரத்தில்
பிரபஞ்சமே சமைக்கிறாய்.

நீ முற்று புள்ளி வைத்த
இடங்களெல்லாம் கொட்டிக்கிடக்கிறது
விஞ்ஞானமும், மெய்ஞானமும்.

உன் காலங்களில் வாழ்வதனால்
என் பிறவிகூட அர்த்தப்படும்.

இன்று
உனை படைத்த பிரம்மனே
உன்னை நோக்கி தவம் இருக்கிறான்.
அவன் காதலிக்கு தர
உன் கவிதை ஒன்று வேண்டுமாம்.
மறுக்காமல் வரம் கொடு.

.

Sunday, November 22, 2009

நானும்,என் கவிதைகளும்.....

என் கவிதைகள் -
குழந்தைகள்
இன்னும் நடை பழகாதவை,
இப்பொழுதுதான்
வரிகளின் விளிம்புகளை பிடித்துக் கொண்டு
எழுந்து நிற்க முயற்சி செய்பவை
அவை தவறி விழும் எனில்
எள்ளி நகைக்காதிர்கள்.

என் கவிதைகள் -
இன்னும் இரசம் பூசாத
கண்ணாடி ஊடகங்கள்
தெளிவான பிம்பங்களையும் கூட
சரியாக பிரதிபலிக்க தெரியாதவை
எனிலும்
உங்கள் விமர்சனங்கள் கொஞ்சம்
கடுமையானதாக இருப்பின்
அதன் மீது வீசி உடைக்காதீர்கள்.

என் கவிதைகள் -
ஓர் இரவு பாடகன்
மலிந்த வெளிச்சத்திலும்,
இரவுகளின் தெருக்களில் மட்டுமே
பாடி திரிந்தவன்.
கல்யாணி ராகத்திற்க்கும்,
முகாரி ராகத்திற்க்கும் வித்தியாசம் தெரியாத
சுத்த தன்யாசி.
என்றாலும்
இவன் சங்கீதத்திற்கு யாரும்
இரங்கல் தெரிவிக்காதிர்கள்.

- கமலேஷ் -

.